Thursday 15 November 2012

குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் மலைவேம்பு

குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் மலைவேம்பு

மலைவேம்பு... மானாவாரியிலும் மகசூல்
கன்றுகளை வாங்க வேண்டாம், நீங்களே உற்பத்தி செய்யலாம்...

 
குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி, காகிதம்... என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்நிலையில், இத்தகையப் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கிலும்... வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வகையிலும், 'ஒட்டு ரக மலைவேம்பு’க் கன்றுகளை உருவாக்கியிருக்கிறார், தமிழக வனத்துறையின் முன்னாள் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் குமாரவேலு!
(பசுமை விகடன் 10.2.2008 தேதியிட்ட இதழில் 'மலைக்க வைக்கும் மலைவேம்பு!’ என்ற கட்டுரை மூலம் குமாரவேலு, மலைவேம்பு சாகுபடி பற்றி நிறைய தகவல் சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மலைவேம்பு சாகுபடி வேகமெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது)
மாதம் ஒரு லட்சம் டன்!
கடலூர் மாவட்டம், வேகாக்கொல்லை கிராமத்திலிருக்கும் நாற்றுப்பண்ணைக்கு, வந்திருந்த குமாரவேலுவைச் சந்தித்தபோது... ''மூங்கில், சவுக்கு, தேக்கு... என்று ஏகப்பட்ட மரங்கள் இருந்தாலும், மலைவேம்பு மரம் சீக்கிரமாகவே வளர்ந்துவிடுவது விவசாயிகளுக்கு விரைவான பலன் தருவதாக இருக்கிறது. தீக்குச்சித் தொழிற்சாலைகளுக்கு ஒரு மாதத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டன் அளவுக்கு மலைவேம்பு மரம் தேவைப்படுகிறது. காகித ஆலைகளுக்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 5 லட்சம் டன் அளவு மரம் தேவைப்படுகிறது என்பதால், விற்பனையில் எந்தப் பிரச்னையும் இல்லை.
விதைக்கன்றுகளில் தரமில்லை!
ஆனால், நல்ல வளர்ச்சியுள்ள தரமான கன்றுகள், குறைந்த விலையில் கிடைப்பதில்லை. நன்றாக வளர்ந்த பெரிய மரங்களில் இருந்துதான் விதைகளைத் தேர்வு செய்து கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பெரும்பாலான பண்ணைகளில் நல்ல விதைகளைத் தேர்வு செய்யாமல், தரமில்லாத கன்றுகள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், மரங்களின் வளர்ச்சி சீராக இருப்பதில்லை.
கைகொடுக்கும் குளோனிங் கன்றுகள்!
2008-ம் ஆண்டு நான் பணி ஓய்வு பெற்ற பிறகு, தமிழ்நாடு புகளூர் காதித ஆலை நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்தேன். அப்போது, தரமான, நன்றாக வளர்ச்சியடைந்த மரங்களைத் தேர்வு செய்து, தரமான வித்துகள் மூலம் 'திசு வளர்ப்பு’ முறையிலும், குளோனிங் (விதை இல்லா இனப்பெருக்க முறை) முறையிலும் கன்றுகளை உற்பத்தி செய்து, ஆய்வுகளை மேற்கொண்டோம்.
அவை சிறப்பாக வளர்ந்து வந்தன. அதனால், அந்த ஆலையில் தற்போது ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் அளவில் 'குளோனிங்’ கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மிகமிகக் குறைவாக 6 ரூபாய் விலையில் விநியோகிக்கப்படுகின்றன.
மலைவேம்புக் கன்றுகள் குறித்தத் தகவல்கள் தேவைப்படுவோர், புகளூர் காகித ஆலை நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். சின்னராஜ் மற்றும் முனைவர்.செழியன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்'' என்ற வழிகாட்டுதல் தந்த குமாரவேலு, தொடர்ந்தார்.
வறட்சிப் பகுதிகளுக்கு ஒட்டுக்கன்றுகள்!
''தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், மரங்கள் வளர்க்க போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. மலைவேம்புக்கும் இந்தப் பிரச்னை உண்டு. அதனால், தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் மலைவேம்பை எப்படி வளர்ப்பது என்று யோசனை செய்த போதுதான், வேப்ப மரத்துடன் ஒட்டுக்கட்டும் யோசனை தோன்றியது. வேப்ப மரத்தில் இருக்கும் ஆணிவேர் 10 மீட்டர் ஆழம் வரை செல்லும் தன்மையுடையது. அதனால், பூமிக்கடியில் உள்ள தண்ணீரை எளிதில் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். மேலும், களர் மற்றும் உவர் மண் பூமியிலும் சிறப்பாக வளரும். வேப்ப மரமும், மலைவேம்பு மரமும் 'மீலியேசியே’ (விமீறீவீணீநீமீணீமீ) என்ற குடும்பத்தைச் சேர்ந்தத் தாவரங்கள். அதனால்தான், 'இரண்டையும் ஒட்டுக் கட்டினால் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கன்றுகள் கிடைக்கும்’ என முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில், திருச்சி மாவட்டம், முக்கொம்பு வன மையத்தில் 50 ஒட்டுக்கன்றுகளை உருவாக்கி, அவற்றை அரிமளம். வன ஆராய்ச்சி நிலையத்தில் நட்டுப் பராமரித்தோம்.
6 மாதங்களிலேயே அதிகமான வளர்ச்சி இருந்தது. ஆகையால், இந்த ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்'' என்றவர், வேகாக்கொல்லை நாற்றுப்பண்ணை பற்றிய செய்திக்கு வந்தார்.
ஒரு நாற்று ஏழு ரூபாய்!
''நெய்வேலி அருகிலிருக்கும் இந்த வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், குளோனிங் முறையில் மலைவேம்பு கன்றுகளை உருவாக்கி, விற்பனை செய்துவருகிறார். தற்போது, தனியார் நாற்றுப் பண்ணைகளில் ஒரு மலைவேம்பு கன்றை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
ஆனால், இவர், குளோனிங் முறையில் உற்பத்தி செய்யும் கன்றுகளை 7 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு ஒட்டுரகக் கன்றுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை நான் கற்றுத் தந்திருக்கிறேன். இதன் மூலம் உருவான கன்றுகளை விரைவில் விற்பனை செய்ய இருக்கிறார்'' என்ற குமாரவேலு, அடுத்து... ஒட்டுரகக் கன்று உருவாக்கும் தொழில்நுட்பத்தை விவரித்தார்.
இப்படித்தான் ஒட்டு கட்டணும்!
''ஒரே வயதுடைய வளமான நாட்டு வேம்பு மற்றும் மலைவேம்புக் கன்றுகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு, நாட்டு வேம்பின் மேல்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, அடிப்பகுதியையும், மலைவேம்புச் செடியின் அடிப்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, மேல் பகுதியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வெட்டி வைத்திருக்கும் மலைவேம்பு கன்றின் தண்டு பாகத்தின் முனைப் பகுதியில், ஒரு பக்கத்தை மட்டும் சீவிக் கொள்ள வேண்டும்.
பிறகு, நாட்டுவேம்பின் தண்டை கொஞ்சம் போல இரண்டாகப் பிளந்து, அதன் மையத்தில் மலைவேம்பு தண்டின் சீவிய பாகத்தை வைத்து, பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு காற்று புகாத அளவுக்கு இறுக்கிக் கட்ட வேண்டும். பிறகு, நிழல் வலையில் 20 நாட்கள் வைத்திருந்தால் துளிர் வரும். பிறகு, கன்றுகளை வேறு இடத்தில் மாற்றி நடவு செய்யலாம். இது மிகமிக எளிதான தொழில்நுட்பம்தான். யார் வேண்டுமானாலும், இந்த முறையில் ஒட்டுக் கன்றுகளை உருவாக்கிவிட முடியும்'' என்று நம்பிக்கைஊட்டினார்!
தொடர்புக்கு,

முனைவர். குமாரவேலு,
செல்போன்: 96000 -73059,
முனைவர். செழியன்
(புகளூர் காகித ஆலை)
செல்போன்: 94425-91412.

இடைவெளி கணக்கில்லை!
மலைவேம்புக் கன்றுகளை, 10 அடி, 9 அடி, 5 அடி... என நமது இடவசதியைப் பொறுத்து, தேவைக்கு ஏற்ற அளவில் இடைவெளி கொடுத்து, நடவு செய்து கொள்ளலாம். 10 அடி இடைவெளியில் நடவு செய்தால், ஏக்கருக்கு சராசரியாக 350 முதல் 400 கன்றுகள் தேவைப்படும். 9 அடி இடைவெளி என்றால், 540 கன்றுகளும், ஐந்தடி இடைவெளி என்றால், 1,000 முதல் 1,200 கன்றுகளும் தேவைப்படும். வரப்பு ஓரங்களில் 3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்யலாம். இதற்கு ஏக்கருக்கு 80 முதல் 100 கன்றுகள் தேவைப்படும்.
மூன்று அடி சதுரம், மூன்றடி ஆழத்தில் குழி எடுத்து... மண்புழு உரம்-2 கிலோ, வேம் (வேர் வளர்ச்சி உட்பூசணம்)-50 கிராம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவற்றில் தலா 20 கிராம் இவற்றை மண்ணோடு கலந்து இரண்டு அடி ஆழத்துக்குக் குழியை நிரப்பி, மையத்தில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒட்டுப்பகுதி, குழியின் உள்ளே, இருப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடி விடக்கூடாது. அதாவது, ஒட்டுப்பகுதியானது மண்ணால் மூடப்படாமல் இருக்க வேண்டும். கன்று வளரத் தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக மூடி வரவேண்டும். ஒரு வருடத்தில் முழுவதும் மூடிவிடலாம். ஒட்டுக்கன்றுகளுக்கு சொட்டுநீர் மூலம் குறைந்த அளவு தண்ணீர் கொடுத்து வந்தால், போதுமானது. தண்ணீர் வசதி அதிகமாக இருந்தால், 'குளோனிங்’ கன்றுகளை நடவு செய்யலாம். தேவையைப் பொறுத்து உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.
ஒன்பது ஆண்டுகளில் 20 லட்சம்!
9 அடிக்கு, 9 அடி இடைவெளியில் நடவு செய்த மரங்கள், மூன்று வருடங்களில் 45 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வரும். அப்போது, ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு ஏறத்தாழ, 35 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். ஒரு டன், 5 ஆயிரம் ரூபாய் என விற்க முடியும்.
மீதி மரங்கள், அடுத்த மூன்றாண்டுகளில் (நடவு செய்து ஆறு ஆண்டுகள்) 100 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வந்து விடும். இவற்றிலும் ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டினால்... 90 மரங்கள் வரை கிடைக்கும். ஒரு மரத்தை 6 ஆயிரம் ரூபாய் என விற்க முடியும்.
இப்போது வெட்டியது போக 90 மரங்கள் வரை நிலத்தில் மிச்சமிருக்கும். இவை அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் (நடவு செய்து பத்து ஆண்டுகள்) 150 சென்டி மீட்டர் முதல் 200 சென்டி மீட்டர் வரை சுற்றளவுக்கு வந்து விடும். அந்த சமயத்தில் ஒரு மரத்தை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இந்தக் கணக்கில் பார்த்தால்... 10 வருடங்களில் ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
thanks vikatan + duraisamy erode + nermai-endrum.blogspot.com

No comments:

Post a Comment