Sunday 30 September 2012

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?

போபியா(phobia) என்று சொல்கிறோம்.சரியான காரணமின்றி அச்சப்படுவதை குறிப்பிடலாம்.இதில் பல வகை உண்டு.நாம் ஒவ்வொருவரும் கவனித்திருப்போம்.சிலர் மட்டும் ஒதுங்கியே இருப்பார்கள்.நான்கு பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கும் போது எதுவும் பேச மாட்டார்கள்.திருமணங்களை,விழாக்களை தவிர்ப்பார்கள்.எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுவது இவர்களுக்கு ஆகாத காரியம்.மற்றவர் முன்னால் செல்போனில் கூட பேச மாட்டார்கள்.
                               வளரிளம் பருவத்தில்தான் இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.குழந்தையிலிருந்து வெளியில் வந்து எல்லாவற்றையும் ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான தருணம்.மற்றவர்கள் போல நாம் இல்லை என்று மனம் விழ,நண்பர்களின் கேலியும்,கிண்டலும் நிலையை இன்னும் மோசமாக்கும்.கல்லூரியில் இருந்தாலும் விவாதங்களில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
                               சிலருக்கு இந்த பிரச்சினை விலகுவதேயில்லை.இம்மாதிரி உள்ள பெரும்பாலானோருக்கு வேறு சில மனநல பாதிப்புகளும் இருக்கும் என்கிறார்கள்.பள்ளி,கல்லூரிகளில் விஷயம் தெரிந்த ஆசிரியர் அமைந்தால் இத்தகைய மாணவர்களுக்கு ஓரளவு உதவ முடியும்.கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம்,உணர்வு ரீதியாக உதவி செய்து இக்குறையை போக்க முயற்சி செய்வார்.
                               சுற்றி உள்ளவ்ர்கள் புரிந்து கொண்டால் உதவ முடியும்.இது அவருக்கு நல்ல அறிகுறி அல்ல! மேலும் மனம் சார்ந்த பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது,டென்ஷன்,கவலை,பாதுகாப்பில்லாமல் உணர்வது,நடுக்கம்,முடிவெடுப்பதில் தாமதம் போன்ற அறிகுறிகளை இவர்களிடம் பார்க்க முடியும்.
                                 மனம் சீரற்று இருப்பதால் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்.எளிதில் சோர்வடைதல்,நாடித்துடிப்பு அதிகரிப்பது,உடலில் சில இடங்களில் வலி,முழுமையானகவனமின்றி இருப்பது,ரத்த அழுத்தம் கூடுவது,நினைவாற்றல் குறைவு ஆகிய உடல் நல பாதிப்புகளும்ம் இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவான விஷயங்கள்.வயதிற்கேற்ப,ஒவ்வொருவருடைய சூழல் பொறுத்து அறிகுறிகளில் மாற்றம் இருக்கலாம்.
                                  இப்படி நாலு பேர் முன்னால் முகத்தை காட்ட அஞ்சுவதை சோஷியல் போபியா(social phobia) என்பார்கள்.கேலி ,கிண்டல் போன்றவை இவர்களுக்கு பெரும் சங்கட்த்தை உருவாக்கும்.அதிக கஷ்டமாக உணர்வார்கள்.நண்பர்கள் மேலும் இதை சிக்கலாக்குவதால் இன்னும் ஒதுங்கியே போவார்கள்.சிலருக்கு இது தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து கொண்டிருக்கும்.
                                  இப்பிரச்சினைக்கான காரணங்கள் என்ன? இவற்றை எதிர்கொள்வது எப்படி? குடும்ப உறுப்பினர்களாக,நண்பர்களாக நாம் எப்படி உதவ முடியும்?
 
தெனாலிராமனின் சூடுபட்ட பூனையை நினைவிருக்கிறதா? சூடான பாலை சுவைத்து நாக்கை சுட்டுக்கொண்ட பூனை மீண்டும் பாலை வைத்தால் குடிக்கவில்லை.சமூக பயம் என்பது இப்படித்தான்.கடந்தகால அனுபவங்களே பயத்தை ஏற்படுத்துகின்றன.செல்லுமிடமெல்லாம் வெற்றியை கண்டால் அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் மனம் ஆட்படாது.ஒதுங்கிப்போகாமல்,ஒளிந்து கொள்ளாமல் சமூகத்தை எதிர்கொள்வோம்.நிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.மாலை நேரம்.லேசான இருட்டு படியத்துவங்கி இருக்கிறது.கவனிக்கவில்லை.பாம்பை மிதித்திருப்பேன்.இருதயத்துடிப்பு அதிகமாக உடல் வியர்த்து கொடூர அனுபவம்.அவ்வளவு நெருக்கமாக பாம்பை அதுவரை நான் பார்த்த அனுபவம் இல்லை.
                                அதே வழியில் நான் நடமாடித்தான் ஆக வேண்டும்.அந்த இட்த்தை கடக்கும் போதெல்லாம் என்னிடம் அதே விளைவு.சில காலம் வரை அப்படி இருந்து கொண்டிருந்த்து.கவனிக்கவும் சில காலம்தான்.பிறகு சரியாக போய் விட்ட்து.இதே போன்ற அனுபவங்கள் தொடர்ந்திருந்தால் வழியில் நடப்பதே பிரச்சினையாக இருக்கும்.கடந்த காலத்தில் சந்தித்த சூழ்நிலைகளே பயத்தை உருவாக்குகின்றன.அடிக்கடி தோல்விகளை எதிர்கொண்ட ஒருவர் சமூக பயத்திற்கு ஆளாக வேண்டி இருக்கலாம்.நிறம் காரணமாக,சமூக தகுதி நிலை காரணமாக,இயலாமை,உறவுகள் தொடர்பாக கேலிக்கும்,கிண்டலுக்கும் ஆளாக நேர்வது பிரச்சினையை கொண்டு வருகிறது.
                                பொத்திப் பொத்தி வளர்க்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன.அம்மா விளையாடுகிறேன்’’ என்றால் ’’ஏதாவது காயம் பட்டு விடும் வேண்டாம்’’ என்பார்கள்.மிக சாதாரணமாக அதெல்லாம் உன்னால் முடியாது வேண்டாம் என்பார்கள்.நெகட்டிவ் வார்த்தைகளையே சொல்லி வளர்க்கும் குடும்பங்களில் இருந்தும் சமூகத்தை எதிர்கொள்ள முடியாத மனிதர்கள் தோன்றலாம்.வாழ்க்கை முழுக்க எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் முன்னோர் சம்பாதித்த சொத்தை வைத்தே பிழைப்பு நடந்துவிடும்.மிக நெருங்கிய உற்றார் உறவினர்கள் மட்டுமே இவர்களுடைய சமூகம்.
                                   டீனேஜ் இளைஞனுக்கு மிகப் பெரிய அடி,பெண்கள் முன்னால் கேலி,கிண்டல் செய்யும்போது ஏற்படுகிறது.மனம் எதிர்பாலினர் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது,உலகமே நம்மை மதிக்கவேண்டும் என்று பேராவல் உள்ள வயதில் நண்பர்களின் கிண்டல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.என்னடா? வேற சட்டையே இல்லையா உங்கிட்ட? இவங்கப்பன் நேத்து குடிச்சுட்டு வந்து அடிச்சாண்டா! இவங்காளுங்க இப்படித்தாண்டா! சில நம்பிக்கைகள்,குடும்ப சூழ்நிலை போன்றவையும் சுற்றி உள்ளவர்களால் சுட்டிக்காட்டி கேலி செய்யப்படும்.அவனால் மாற்ற முடியாத விஷயமாக இருக்கும்.
                                    தாழ்வு மனப்பான்மை அதிகரித்து மற்றவர்களை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.தனிமை,சமூகத்தில் ஒட்டாத நிலையால் பொது அறிவும் விழுந்துவிடும்.நான்கு பேரோடு கலந்து பழகும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது.இப்படி இருக்கும் பலர் போதை மருந்துகளுக்கு,குடிக்கு ஆளாவதும் சாத்தியம்.சூழல் தொடர்ந்து மாறாமல் இருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலையில் முடிவதும் உண்டு.
                               சுற்றியுள்ள சமூகமே சோஷியல் போபியாவுக்கான காரணமாக இருக்கிறது.குறிப்பிட்ட இட்த்தில் பாம்பை பார்த்த அனுபவம் பாம்பின் மீது பயத்தை உருவாக்குவது போலவே சமூகம் தந்த அனுபவம் சமூகத்தின் மீது பயத்தை ஏற்படுத்துகிறது.தொடர் தோல்விகள் முயற்சியில்லாமல் ஒதுங்க வைக்கிறது.இப்படிப்பட்டவர்களை நண்பர்கள் அடையாளம் கண்டால் மற்றவர்களிடம் பெருமையாக அறிமுகப்படுத்தலாம்.அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தரலாம்.அவர் முக்கியமானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

Read more: http://counselforany.blogspot.com/2012/01/blog-post_06.html#ixzz281VlOkRG

Monday 3 September 2012

செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து!

கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்


செல்பேசிக் கோபுரங்களால் குழந்தைகள், பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்களால் பார்க்காமலும் காதால் கேட்காமலும் மனிதனின் புலன்களால் உணரப்படாமலேயே மின்காந்தக் கதிர்வீச்சால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.

செல்பேசிக் கோபுரத்தின் பாதிப்புகள்

செல்பேசி மின்நச்சுப்புகையை 1. செல்பேசியிலிருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு, 2. செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு என இரண்டாக பிரித்துப் பார்க்கலாம். ஒப்பீட்டளவில், செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு மிக மோசமானதாகும்.
செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்பது செல்பேசி இயக்கநிலையில் இருக்கும்போதும், காதுக்கு அருகில் வைக்கும்போதும், உடலோடு ஒட்டிய நிலையில் இருக்கும் போதும் அதிலிருந்து கதிர்வீச்சு தாக்கும். செல்பேசியை உரிய எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் இந்தக் கதிர்வீச்சைத் தடுக்கலாம்.

செல்பேசிக் கோபுர மின்காந்தக் கதிர்வீச்சு

ஆனால், செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சு இருபத்துநான்கு மணிநேரமும் அதன் அருகே வசிப்போரைத் தாக்கிக்கொண்டே இருக்கும். இதிலிருந்து சுற்றுப்புறத்தில் வாழ்வோர் தப்ப முடியாது. செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் வரை இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் 300 மீட்டர் தூரம் வரை தாக்கம் கூட பாதிப்பு இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றபடி, இரண்டுவகை கதிர்வீச்சும் ஒரே மின்காந்தக் கதிர்வீச்சுதான் (Electromagnetic Radiation).
இந்தியா முழுவதும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் கூடுதலான செல்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 90 கோடிக்கும் அதிகமான செல்பேசிகளுக்கு செவை அளிக்கப்படுகிறது. உண்மையில், செல்பேசிக் கோபுரங்கள் ஒரு மிகப்பெரிய மின்நச்சுப்புகை சிக்கலாக மாறிவிட்டன. நகரப்பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சினை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு (Thermal radiation), வெப்பம் சாராக் கதிர்வீச்சு (Non-thermal radiation) என்று இருவகையாகப் பிரிக்கின்றனர். வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு என்பது சமைப்பதற்கு பயன்படுத்தும் மைக்ரோ ஓவனில் ஏற்பதும் வெப்பத்திற்கு ஈடானதாகும். செல்பேசியை காதுக்கு அருகே வைத்து நீண்ட நேரம் பேசினால் தலை சூடாவது இந்த வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சினால்தான்.

வெப்பம் சாராக் கதிர்வீச்சு இதைவிட மிக மோசமானதாகும். இது மனித உடலின் மின்காந்தப் புலத்தைப் பாதிக்கிறது. இது உயிரியல் ரீதியிலான (biological) பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் இதுவரை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சுக்கு மட்டுமே ஓரளவுக் கட்டுப்பாடுகள் உள்ளன. வெப்பம் சாராக் கதிர்வீச்சுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை.

செல்பேசிக் கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் நேருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு முகமை (IARC) 'மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள' கதிர்வீச்சாக செல்பேசிக் கதிர்வீச்சினை வகைப்படுத்தியுள்ளது. மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மூளையின் பாதுகாப்புத் தடுப்பில் பாதிப்பு, மரபணு பாதிப்பு, இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு, உயிரணுப் பாதிப்பு, காதுக் கோளாறுகள், பார்வைக் குறைவு, எலும்புகள் வலுவிழத்தல், நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, தூக்கம் குறைதல், குழந்தைகள் பாதிப்பு, கருவுற்ற தாய்மார்களுக்குப் பாதிப்பு, தூக்கமின்மை என ஏராளமான பாதிப்புகளை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது.
மும்பையில் மூளைப் புற்றுநோய்க்கு காரணமான செல்பேசிக் கோபுரம்
புற்றுநோய்: மும்பையின் கார்மிகேல் சாலையில் உள்ள விஜய் அப்பார்ட்மென்ட்ஸ் எனும் கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் ஏராளமான செல்பேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிரிலேயே உஷாகிரண் கட்டடம் எனும் பலமாடி அடுக்குக் குடியிடுப்பு இருந்தது. உஷாகிரண் குடியிருப்பின் 6 முதல் 10 வரையிலான தளங்கள்  விஜய் அப்பார்ட்மென்ட்டின் செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் நேரடித் தாக்கத்துக்கு ஆளாகின. மூன்றே ஆண்டுகளில் உஷாகிரண் கட்டடத்தின் 6, 7, 8 மற்றும் 10 ஆவது மாடியில் வசித்தோரில் 6 பேர் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று கண்டறியப்படாமல் ஏராளமான புற்றுநோயாளிகளை செல்பேசிக் கோபுரங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செல்பேசிக் கதிர்வீச்சு ஆண்மைக் குறைவை உண்டாக்கும்
ஆண்மைக் குறைவு: செல்பேசிக் கதிர்வீச்சால் அதிக அளவில் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றது. எந்த அளவுக்கு அதிகமான நேரம் செல்பேசிகளை ஆண்கள் பயன்படுத்துகின்றனரோ அந்த அளவுக்கு ஆண்மைக் குறைவின் தாக்கம் அதிகரிக்கும். ஆண்களின் விந்தணுவின் தரம் குறைதல், உயிரணு எண்ணிக்கை குறைதல் எனப்பல பாதிப்புகள் செல்பேசிக் கதிர்வீச்சால் ஏற்படுகின்றது.

மூளையின் பாதுகாப்புச் தடுப்பில் பாதிப்பு: மனித மூளையில் இரத்த ஓட்டத்திற்கும் மூளையின் திசுக்களுக்கும் இடையே மெல்லிய தடுப்புச் சுவர் அமைந்துள்ளது. இரத்த மூளைத் தடுப்பு (Blood Brain Barrier) எனப்படும் இந்த அமைப்பு இரத்தத்தில் உள்ள சத்துக்களில் தேவையானவற்றை மட்டுமே மூளைக்குள் அனுமதிக்கின்றன. மிகமுக்கியமான இந்த பாதுகாப்புச் சுவர் செல்பேசிக் கதிர்வீச்சால் பாதிப்படைகிறது. தேவையில்லாத நுண்ணூட்டங்கள் உள்ளே செல்லும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பலவிதமான மூளைப் பாதிப்புகள் தாக்குகின்றன.
செல்பேசிக் கதிர்வீச்சு மூளையைப் பாதிக்கும் 
மரபணு பாதிப்பு: செல்பேசி நுண்ணலைகளால் மனித மரபணு பாதிப்படைகிறது. டி.என்.ஏ சேதமடைதல், தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும் ஆற்றலைக் குறைத்தல் போன்ற பல விளைவுகள் நேருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. மனித உயிரணுக்களில் ஏற்படும் சேதம் காலப்போக்கில் புற்றுநோயாகவும் மாற்றமடைகிறது.

இருதய அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு: விமானங்களின் தகவல் தொடர்பை செல்பேசி பாதிக்கிறது என்பதால் விமானப் பயணங்களின் போது செல்பேசியை அணைத்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான் மருத்துவமனைகளில் உள்ள பலவிதமான மின்னணுக் கருவிகளின் செயல்பாட்டை செல்பேசி பாதிக்கிறது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற சிக்கலான மருத்துவ இடங்களில் செல்பேசி அணைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இருதைய அறுவை சிகிச்சையின் போது 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டோருக்கு செல்பேசிகள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். செல்பேசியை இயக்கும் போது அளிக்கப்படும் மின்னணுக் கட்டளைகள் பேஸ் மேக்கர் கருவியின் செயல்பாட்டில் தலையிட்டு தவறான கட்டளைகளைக் கொடுத்து பேஸ் மேக்கர் கருவியை தாறுமாறாக இயக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவியளாளர்கள் எச்சரிக்கின்றனர்.

காதுக் கோளாறுகள்: செல்பேசிகளால் காது கேட்கும் திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 'ரிங்சியெட்டி' எனப்படும் ஒன்றுமில்லாமல் இறைச்சல் சத்தம் காதுக்குள் கேட்கும் துன்பத்தால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காதின் கேட்கும் திறன் என்பது காதுக்குள் இருக்கும் 16000 இழை உயிரணுக்களின் நலத்தைப் பொருத்ததாகும். இந்த இழை உயிரணுக்கள் செல்பேசிக் கதிர்வீச்சால் சேதமடைகின்றன. இவை மீண்டும் வளருவது நின்றால் கேட்கும் திறன் குறைய ஆரம்பித்துவிடும். தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் செல்பேசியில் பேசுபவர்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் கேட்கும் திறனைக் கணிசமாக இழந்து போவார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கண்கள் பாதிப்பு: தொடர்ச்சியாக செல்பேசியில் பேசுவது கண்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியாதாகும். செல்பேசியை தலைக்கு அருகிலேயே வைத்துப் பேசும்போது அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் தலை சூடாகிறது. எனினும் தலைப்பகுதியில் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டு இந்த வெப்பம் மற்ற பகுதிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனால் தலை, காது பகுதிகள் சூட்டிலிருந்து ஓரளவுக்கு தப்புகின்றன. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடு கண்ணில் இல்லை.

மனித விழியில் சரளமான இரத்த ஓட்டம் இல்லாததால், செல்போன் கதிர்வீச்சால் கண்ணில் ஏற்படும் வெப்பம் கண்ணை சூடாக்குகிறது. வெப்பத்தின் அளவு மிக அதிகமாகும் போது விழித்திரைப் பாதிப்படைகிறது. பார்வைக் குறைபாடுகள் நேருகின்றன.

எலும்பு பாதிப்பு: மனித எலும்பு தேய்வதற்கு செல்பேசிகள் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடுப்பில் செல்பேசியை அணிந்து செல்வோரை மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவ்வாறு அணியாதவர்களை விட அதிகமாக இடுப்பு எலும்புப் பகுதி தேய்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, மனித உடலில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் செல்பேசிகளை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தூக்கமின்மை: செல்பேசிகளால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு தூக்கமின்மை. குறிப்பாக நான்காம் கட்ட தூக்கம் எனப்படும், மனித உடலும் மூளையும் தன்னைதானே சீரமைத்துக் கொள்ளும் தூக்கத்தை செல்பேசிகள் கெடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசிக் கதிர்வீச்சு தூக்கத்தைக் கெடுக்கும் 
தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதால் தூக்கம் கெடுகிறது. தலைவலி, மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதும், செல்பேசியை தலைக்கு அருகில் வைத்துத் தூங்குவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், படிப்பில் கவனமின்மை, ஆளுமையில் மாற்றம் எனப்பலக் கேடுகள் நேருகின்றன.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் செல்பேசிக் கதிர்வீச்சு
குழந்தைகள் பாதிப்பு: செல்பேசியாலும், செல்போன் கோபுரங்களாலும் சிறுவர்களும் குழந்தைகளும் அதிகமாக பாதிப்படைகின்றனர். குழந்தைகளின் சிறிய தலை, சிறிய அளவில் மூளை, மழுமையாக வளர்ச்சியடையாத எலும்புகள், மென்மையான தோல், மெல்லிய செவி என எல்லாமும் அதிக அளவுக்கு மின்காந்த கதிர்வீச்சால் பாதிப்படைகின்றன.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் - கதிர்வீச்சின் பாதிப்புகள் அவர்களை எளிதில் தாக்குகின்றன. செல்பேசிக் கருவிகளை வைத்து விளையாடும் குழந்தைகள் ஞாபக சக்திக் குறைவு, கவனக் குறைவு, கற்கும் திறன் குறைவு உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதி செய்யப்பட்டுள்ளாது.

எனவேதான், பெரும்பாலான மேற்குலக நாடுகள் 16 வயதுக்கு கீழுள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்த பயன்படுத்த வேண்டாம் என வெளிப்படையாக அறிவுறுத்துகின்றன.

பெண்கள் பாதிப்பு: கருவுற்ற தாய்மார்கள் செல்பேசியைப் பயன்படுத்துவதும், செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பதும் மிக ஆபத்தானதாகும். கருவுற்ற தாய்மார்கள் செல்பேசி பேசுவதால் கருச்சிதைவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறே, பிறந்த குழந்தைகளிடம் நடத்தை மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியாக - மனிதர்களுக்கு எண்ணற்ற பாதிப்புகளை செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற தாய்மார்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். 
செல்பேசிக் கோபுரம் =24 மணி நேரக் கதிர்வீச்சு
செல்பேசிகள் சில மணி நேரப் பயன்பாட்டால் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால், செல்பேசிக் கோபுரங்கள் அதைவிட பலமடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. செல்பேசிக் கோபுரத்திலிருந்து ஒவ்வொரு நாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் மிக அதிக அளவான கதிர்வீச்சு வீசிக்கொண்டே இருக்கிறது. இதனால் செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எல்லா நேரமும் கதிவீச்சால் தாக்கப்படுகின்றனர்.

நன்றி: http://arulgreen.blogspot.com

செல்ஃபோன் கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி?

எல்லோரும் செல்பேசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நுகர்வோருக்கு சொல்லாமல் செல்பேசி நிறுவனங்கள் மறைத்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக,
  • எந்த ஒரு செல்பேசிக் கருவியையும் காதுக்கு மிக அருகில் வைத்து பேசக்கூடாது. 
  • ஒரு நாளில் ஒட்டுமொத்தமாக 18 முதல் 24 நிமிடங்களுக்கு மேல் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது. 
  • குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்தவே கூடாது. 
இதுபோன்ற பல சாதாரண பழக்கங்கள் கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நச்சு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது என்று செல்பேசி நிறுவனங்களே நுண்ணிய எழுத்துகளில் எச்சரிக்கை செய்கின்றன. 
பிளாக்பெர்ரி நிறுவனத்தின் எச்சரிக்கை.

செல்பேசியிலிருந்து வெளியாகும் நுண்ணலைக் கதிர்வீச்சால் (Microwave Radiation) செல்பேசி பயன்படுத்துவோரின் உடல்நலம் பாதிப்படைகிறது என்பது அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கமோ, செல்பேசி நிறுவனங்களோ இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

செல்பேசிக் கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்த ICNIRP எனப்படும் அமைப்பின் காலாவதியான பரிந்துரைகளே இப்போதும் பின்பற்றப்படுகின்றன. இந்த அமைப்பு ஒரு பொதுஅமைப்பு அல்ல. ஜெர்மனி நாட்டிலுள்ள ஒரு தனியார் கூட்டமைப்பு இதுவாகும். தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்த அமைப்பின் பரிந்துரைகள் நம்பகமானவை அல்ல. எனவே, செல்பேசியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள சில எளிய வழிகள்

பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செல்பேசிக் கதிர்வீச்சினால் உடல்நலம் பாதிப்படையாமல் தற்காத்துக்குகொள்ள முடியும்:

1. செல்பேசியை நேரடியாகக் காதில்வைத்து பேசாதீர். செல்பேசிக் கதிர்வீச்சு காதையும் தலையையும் தாக்குவது ஆபத்தானதாகும். எனவே காதில் பொருத்தக்கூடிய தலையணி ஒலிவாங்கிக் கருவிகளை (Headset) பயன்படுத்துங்கள்.

- செல்பேசிக் கருவியை விட திறக்கற்றை எனப்படும் புளூடூத் (Bluetooth) கருவிகள் குறைவான கதிர்வீச்சு கொண்டவை என்பதால், குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட புளூடூத் பயன்படுத்தலாம். ஆனால், அதனை காதில் அணிந்திருக்கும் போது நிரந்தரமாக இயங்கு (ON) நிலையில் வைக்கக் கூடாது. பேசும்போது மட்டும் புளூடூத்தை இயக்கி மற்ற நேரத்தில் அணைத்துவிட (OFF) வேண்டும்.

- தலையணி ஒலிவாங்கிக் கருவி (Headset), புளூடூத் ஆகியன இல்லாத நேரத்தில் ஒலிபெருக்கியை (Speaker) பயன்படுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது.

2. செல்பேசிக் கருவியை கூடுமானவரை உடலில் இருந்து சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். தலையணி ஒலிவாங்கி, புளூடூத் போன்றவற்றை பயன்படுத்தும் போதுகூட செல்பேசியை சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். ஏனெனில், செல்பேசிக்கும் உடலுக்கும் இடையே சில அங்குல இடைவெளியை ஏற்படுத்தினால் கூட அதனால் பல நூறுமடங்கு கதிர்வீச்சு குறைந்துவிடும்.

- தவிர்க்க முடியாத நிலையில் செல்பேசிக் கருவி உடலோடு ஒட்டிய நிலையில் இருக்குமானால், விசைப்பலகை (keyboard) உள்ள முன்பக்கம் உடலை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். செல்பேசிக் கருவியின் பின்பக்கத்தில் இருக்கும் அலைவாங்கி (antenna) உடல் பக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. முடிந்த வரை செல்பேசியில் பேசுவதைக் குறைக்க வேண்டும். குறைவான நேரமே பேச வேண்டும். பேசுவதைக் குறைத்து குறுஞ்செய்தியைப் பயன்படுத்தலாம்.

4. செல்பேசியின் சமிக்ஞை (signal) குறைவாகக் இருக்கும் இடங்களில் செல்பேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சமிக்ஞை குறையும்போது செல்பேசியில் அதிகக் கதிர்வீச்சு வெளியாகிறது.

5. குழந்தைகள் ஒருபோதும் செல்பேசியில் பேசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவசரக் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் குழந்தைகள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

- 16 வயதுக்கு கீழானவர்கள் தவிர்க்க முடியாமல் செல்பேசியைப் பயன்படுத்த நேர்ந்தால் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைகள், சிறுவர்களை செல்பேசிக் கதிர்வீச்சு அதிகமாகப் பாதிப்பதால் இக்கட்டுப்பாடுகள் அவசியம்.

6. தூங்கும் போது தலைக்கு அருகிலோ, தலையணைக்கு கீழோ செல்பேசியை ஒருபோதும் வைக்காதீர். அவ்வாறே, தூங்குவதற்கு முன்பு கைபேசியில் பேசாதீர். இவற்றால் தூக்கம் கெடும்.

7. கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் உறைகள், ஒட்டிகள், அல்லது பாதுகாப்பு கவசங்கள் கொண்டு செல்பேசிக் கருவியை மறைக்காதீர். இவற்றால் கதிர்வீச்சு அதிகமாகும்.

8. வீடு அல்லது அலுவலகத்தில் முடிந்தவரை சாதாரண கம்பிவழி தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.

9. கருவுற்ற பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்கு அருகில் செல்பேசியை வைக்கக் கூடாது. பச்சிளம் குழந்தைகளிடம் செல்பேசியை விளையாடக் கொடுக்கக் கூடாது.

10. செல்பேசியை பயன்படுத்திக் கொண்டே ஒருபோதும் வாகனம் ஓட்டக் கூடாது. இது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு இணையான கொடுஞ்செயலாகும்.
நன்றி: http://arulgreen.blogspot.com