Sunday 30 September 2012

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?

போபியா(phobia) என்று சொல்கிறோம்.சரியான காரணமின்றி அச்சப்படுவதை குறிப்பிடலாம்.இதில் பல வகை உண்டு.நாம் ஒவ்வொருவரும் கவனித்திருப்போம்.சிலர் மட்டும் ஒதுங்கியே இருப்பார்கள்.நான்கு பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கும் போது எதுவும் பேச மாட்டார்கள்.திருமணங்களை,விழாக்களை தவிர்ப்பார்கள்.எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுவது இவர்களுக்கு ஆகாத காரியம்.மற்றவர் முன்னால் செல்போனில் கூட பேச மாட்டார்கள்.
                               வளரிளம் பருவத்தில்தான் இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.குழந்தையிலிருந்து வெளியில் வந்து எல்லாவற்றையும் ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான தருணம்.மற்றவர்கள் போல நாம் இல்லை என்று மனம் விழ,நண்பர்களின் கேலியும்,கிண்டலும் நிலையை இன்னும் மோசமாக்கும்.கல்லூரியில் இருந்தாலும் விவாதங்களில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
                               சிலருக்கு இந்த பிரச்சினை விலகுவதேயில்லை.இம்மாதிரி உள்ள பெரும்பாலானோருக்கு வேறு சில மனநல பாதிப்புகளும் இருக்கும் என்கிறார்கள்.பள்ளி,கல்லூரிகளில் விஷயம் தெரிந்த ஆசிரியர் அமைந்தால் இத்தகைய மாணவர்களுக்கு ஓரளவு உதவ முடியும்.கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம்,உணர்வு ரீதியாக உதவி செய்து இக்குறையை போக்க முயற்சி செய்வார்.
                               சுற்றி உள்ளவ்ர்கள் புரிந்து கொண்டால் உதவ முடியும்.இது அவருக்கு நல்ல அறிகுறி அல்ல! மேலும் மனம் சார்ந்த பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது,டென்ஷன்,கவலை,பாதுகாப்பில்லாமல் உணர்வது,நடுக்கம்,முடிவெடுப்பதில் தாமதம் போன்ற அறிகுறிகளை இவர்களிடம் பார்க்க முடியும்.
                                 மனம் சீரற்று இருப்பதால் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்.எளிதில் சோர்வடைதல்,நாடித்துடிப்பு அதிகரிப்பது,உடலில் சில இடங்களில் வலி,முழுமையானகவனமின்றி இருப்பது,ரத்த அழுத்தம் கூடுவது,நினைவாற்றல் குறைவு ஆகிய உடல் நல பாதிப்புகளும்ம் இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவான விஷயங்கள்.வயதிற்கேற்ப,ஒவ்வொருவருடைய சூழல் பொறுத்து அறிகுறிகளில் மாற்றம் இருக்கலாம்.
                                  இப்படி நாலு பேர் முன்னால் முகத்தை காட்ட அஞ்சுவதை சோஷியல் போபியா(social phobia) என்பார்கள்.கேலி ,கிண்டல் போன்றவை இவர்களுக்கு பெரும் சங்கட்த்தை உருவாக்கும்.அதிக கஷ்டமாக உணர்வார்கள்.நண்பர்கள் மேலும் இதை சிக்கலாக்குவதால் இன்னும் ஒதுங்கியே போவார்கள்.சிலருக்கு இது தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து கொண்டிருக்கும்.
                                  இப்பிரச்சினைக்கான காரணங்கள் என்ன? இவற்றை எதிர்கொள்வது எப்படி? குடும்ப உறுப்பினர்களாக,நண்பர்களாக நாம் எப்படி உதவ முடியும்?
 
தெனாலிராமனின் சூடுபட்ட பூனையை நினைவிருக்கிறதா? சூடான பாலை சுவைத்து நாக்கை சுட்டுக்கொண்ட பூனை மீண்டும் பாலை வைத்தால் குடிக்கவில்லை.சமூக பயம் என்பது இப்படித்தான்.கடந்தகால அனுபவங்களே பயத்தை ஏற்படுத்துகின்றன.செல்லுமிடமெல்லாம் வெற்றியை கண்டால் அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் மனம் ஆட்படாது.ஒதுங்கிப்போகாமல்,ஒளிந்து கொள்ளாமல் சமூகத்தை எதிர்கொள்வோம்.நிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.மாலை நேரம்.லேசான இருட்டு படியத்துவங்கி இருக்கிறது.கவனிக்கவில்லை.பாம்பை மிதித்திருப்பேன்.இருதயத்துடிப்பு அதிகமாக உடல் வியர்த்து கொடூர அனுபவம்.அவ்வளவு நெருக்கமாக பாம்பை அதுவரை நான் பார்த்த அனுபவம் இல்லை.
                                அதே வழியில் நான் நடமாடித்தான் ஆக வேண்டும்.அந்த இட்த்தை கடக்கும் போதெல்லாம் என்னிடம் அதே விளைவு.சில காலம் வரை அப்படி இருந்து கொண்டிருந்த்து.கவனிக்கவும் சில காலம்தான்.பிறகு சரியாக போய் விட்ட்து.இதே போன்ற அனுபவங்கள் தொடர்ந்திருந்தால் வழியில் நடப்பதே பிரச்சினையாக இருக்கும்.கடந்த காலத்தில் சந்தித்த சூழ்நிலைகளே பயத்தை உருவாக்குகின்றன.அடிக்கடி தோல்விகளை எதிர்கொண்ட ஒருவர் சமூக பயத்திற்கு ஆளாக வேண்டி இருக்கலாம்.நிறம் காரணமாக,சமூக தகுதி நிலை காரணமாக,இயலாமை,உறவுகள் தொடர்பாக கேலிக்கும்,கிண்டலுக்கும் ஆளாக நேர்வது பிரச்சினையை கொண்டு வருகிறது.
                                பொத்திப் பொத்தி வளர்க்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன.அம்மா விளையாடுகிறேன்’’ என்றால் ’’ஏதாவது காயம் பட்டு விடும் வேண்டாம்’’ என்பார்கள்.மிக சாதாரணமாக அதெல்லாம் உன்னால் முடியாது வேண்டாம் என்பார்கள்.நெகட்டிவ் வார்த்தைகளையே சொல்லி வளர்க்கும் குடும்பங்களில் இருந்தும் சமூகத்தை எதிர்கொள்ள முடியாத மனிதர்கள் தோன்றலாம்.வாழ்க்கை முழுக்க எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் முன்னோர் சம்பாதித்த சொத்தை வைத்தே பிழைப்பு நடந்துவிடும்.மிக நெருங்கிய உற்றார் உறவினர்கள் மட்டுமே இவர்களுடைய சமூகம்.
                                   டீனேஜ் இளைஞனுக்கு மிகப் பெரிய அடி,பெண்கள் முன்னால் கேலி,கிண்டல் செய்யும்போது ஏற்படுகிறது.மனம் எதிர்பாலினர் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது,உலகமே நம்மை மதிக்கவேண்டும் என்று பேராவல் உள்ள வயதில் நண்பர்களின் கிண்டல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.என்னடா? வேற சட்டையே இல்லையா உங்கிட்ட? இவங்கப்பன் நேத்து குடிச்சுட்டு வந்து அடிச்சாண்டா! இவங்காளுங்க இப்படித்தாண்டா! சில நம்பிக்கைகள்,குடும்ப சூழ்நிலை போன்றவையும் சுற்றி உள்ளவர்களால் சுட்டிக்காட்டி கேலி செய்யப்படும்.அவனால் மாற்ற முடியாத விஷயமாக இருக்கும்.
                                    தாழ்வு மனப்பான்மை அதிகரித்து மற்றவர்களை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.தனிமை,சமூகத்தில் ஒட்டாத நிலையால் பொது அறிவும் விழுந்துவிடும்.நான்கு பேரோடு கலந்து பழகும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது.இப்படி இருக்கும் பலர் போதை மருந்துகளுக்கு,குடிக்கு ஆளாவதும் சாத்தியம்.சூழல் தொடர்ந்து மாறாமல் இருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலையில் முடிவதும் உண்டு.
                               சுற்றியுள்ள சமூகமே சோஷியல் போபியாவுக்கான காரணமாக இருக்கிறது.குறிப்பிட்ட இட்த்தில் பாம்பை பார்த்த அனுபவம் பாம்பின் மீது பயத்தை உருவாக்குவது போலவே சமூகம் தந்த அனுபவம் சமூகத்தின் மீது பயத்தை ஏற்படுத்துகிறது.தொடர் தோல்விகள் முயற்சியில்லாமல் ஒதுங்க வைக்கிறது.இப்படிப்பட்டவர்களை நண்பர்கள் அடையாளம் கண்டால் மற்றவர்களிடம் பெருமையாக அறிமுகப்படுத்தலாம்.அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தரலாம்.அவர் முக்கியமானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

Read more: http://counselforany.blogspot.com/2012/01/blog-post_06.html#ixzz281VlOkRG

No comments:

Post a Comment