Monday 29 December 2014

தலைவா வா!

‘ஒரு தலைவனைப் போல் பேசுங்கள்’ எனும் ஜீடித் ஹம்ப்ரே எழுதிய (ஸ்பீக்கிங் அஸ் எ லீடர்) புத்தகம் தலைவர்களுக்கு (லீடர் அலுவலகமானாலும் சரி, அரசிய லானாலும் சரி) பேச்சுத்திறன் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றது. 

* நேர்மறை சிந்தனை
* தொடர்ச்சியான கடின முயற்சி
* பிரமாண்ட நம்பிக்கை
* மகா பொறுமை

போர்டு ரூமோ அல்லது மீட்டிங் ரூமோ, பொதுமேடையோ அல்லது சாதாரணமாய் பேசும் ஒரு டெலிபோன் காலோ ஒவ்வொரு முறை நீங்கள் பேசும் போதும் அந்தப் பேச்சில் தலைமைப் பண்புகள் நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது எப்படி? என்பதைச் சொல்கின்றார் ஆசிரியர். 

இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக லீடர்ஷிப் பயிற்சிகளை அளித்து வரும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அலுவலகத்தில் அடுத்தவரிடத்தில் பேசும் ஒவ்வொரு பேச்சும் நமக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அதை மற்றவர் களிடத்தில் நம்முடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் விதத்திலும் (இன்ஃப்ளுயன்ஸ்), நம்முடைய ஆளுமைத் திறமையை உணர்ந்து நம்மீது ஈர்ப்புகொள்ளும் விதத்திலும் (இன்ஸ்ப்பையர்) உபயோகித்துக் கொள்வது எப்படி என்பதை தெளிவு படுத்துகின்றார். திறமையான லீடர்கள் அவர்கள் வகிக்கும் பதவி மட்டுமே அவர்களுக்கு பெரிய அளவிலான மரி யாதையை உண்டுபண்ணுவது இல்லை என்பதை புரிந்து வைத்திருக்கின்றார்கள். 

தலைவனின் மதிப்பு
ஒரு லீடரின் மதிப்பை உயர்த்துவது என்பது அவர்களை முழுமையாக நம்புபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில்தான் இருக்கின்றது என் பதையும் தெளிவாய்ப் புரிந்துவைத் துள்ளனர். அதனாலேயே, அவர்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பை, அது மேடைப்பேச்சானாலும் சரி, பிரசன் டேஷனானாலும் சரி, போன் பேசுவதிலானாலும் சரி, ஏன் அலுவலகத்தில் மின் தூக்கியில் (லிப்ட்) சக ஊழியர்களுடன் பயணிக்கும் போதானாலும் சரி முழு மையாக தங்களுடைய தலைமைப் பண்பை வெளிக்காட்டும் விதத்தில் அமைத்துக்கொள்ளத் தவறுவதே யில்லை. 

சக பணியாளார், சீனியர் மேனேஜ்மெண்ட், வாடிக்கையாளர், தொழில் கூட்டாளிகள் என பலதரப்பட்ட நபர்களிடத்திலுமே லீடர்கள் பேசும் போது ஒரு சுறுசுறுப்பான பரபரப்பு பற்றிக்கொள்ளும் வகையில் தங்கள் பேச்சை அமைத்துக்கொள்கின்றனர் என்கின்றார் ஆசிரியர். 

லீடர்களின் இந்தப் பண்புகளை ஆராய்ந்தறிந்து ஜீடித் ஹம்ப்ரெயின் நிறுவனம் கண்டுபிடித்ததுதான் லீடர்ஷிப் மாடல் எனும் பேச்சாற்றலை பெருக்கு வதற்கான வழிமுறையை. இந்த மாடல் சொல்வது என்ன என்று பார்த்தால் ஒவ் வொரு சமயத்திலும் ஒரு தலைவனைப் போல் பேசுவது எப்படி? என்பதற்கான விஷயங்களைத்தான். 

இந்த மாடலில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு லீடர் தன்னுடைய பேச்சு குறித்த நடை முறைகளை மாற்றியமைத்துக்கொண் டால் அதன் பின்னர் அவர் பேசுவது நீண்டதொரு மேடைப்பேச்சானாலும் சரி, அலுவலகத்தில் லிப்டில் பயணிக்கும் போது பேசும் ஒரு சில வினாடிகளுக்கான பேச்சானாலும் சரி அது முழுக்க முழுக்க தலைமைப் பண்பை கொண்ட பேச்சாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை தருகின்றார் ஆசிரியர். நான்கு படி நிலைகளைக் கொண்ட இந்த மாடலை நீங்கள் பின்பற்றும் போது உங்களின் உள்ளே ஓளிந்திருக்கும் தலைமைப் பண்பு வெளிக்கொணரப்பட்டு மிளிரும் என் கின்றார் ஆசிரியர். 

தலைவனைப் போல் சிந்திப்பது
தலைவனாய் மாற முதலில் தலை வனைப் போல் சிந்திக்க வேண்டும். நான் எந்த மாதிரியான தலைமைப் பண்புகளைக் கொண்டு திகழப்போகின் றேன் என்பதை சிந்தித்து மனதில் உரு வேற்றவேண்டும். அந்தச் சிந்தனை யின் விளைவால் பெற்ற எண்ணங் களை நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பேசும் வாய்ப்பிலும் நாம் அழுத்தந்திருத் தமாய் வெளிப்படுத்தும் வகையில் நம்முடைய பேச்சை அமைக்க நாம் முயற்சிக்கவேண்டும். நல்ல தலைவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருப்பது ஒரே ஒரு விஷயத்தைத்தான். அவர்களுடைய பேச்சு கேட்பவர்களை ஈர்க்கப்படும் படி அமைக்கப்பட்டிருக்கவேண்டுமே தவிர வெறுமனே தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதைப் போல் ஒரு போதும் அமைக் கப்பட்டுவிடக்கூடாது எனபதுதான் அது. 

இது மட்டுமல்ல நல்ல தலைவர் கள் அடுத்தவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவும், மற்றவர்களிட மிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தெரிந்துவைத்துக் கொண் டிருக்கின்றார்கள் என்கிறார் ஆசிரியர். 

தலைவன் போன்ற பேச்சை தயாரிப்பது
நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் எந்த விதமான எதிர்பார்ப்புடன் இருப்பார் கள் என்பதை சிறந்த தலைவர்கள் தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர் என்று சொல்லும் ஆசிரியர் பேச்சின் ஆரம்பமே அனைவரையும் அட என்னமா பேசுகின்றார் என நினைக்க வைத்து கூர்ந்து கேட்கத் தூண்டுவதாய் அமைய வேண்டும் என்கின்றார். அப்படி பேச்சைக் கேட்கும் நபர்கள் கூர்ந்து கேட்க ஆரம்பிக்கும் போது உடனடியாக உங்கள் பேச்சின் அடிநாதம் என்ன என்பதைச் சொல்லிவிட வேண்டும் என்கின்றார். தலைவனின் பேச்சில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயமே அந்த அடிநாதம்தான். அதுதான் பவர்புல்லான ஒன்று. 

உழைப்பைக் கூட்டவேண்டுமா, திறனை அதிகரிக்க வேண்டுமா, போகும் பாதையை மாற்ற வேண்டுமா, போராட் டம் நடத்தவேண்டுமா என என்ன அப்போது பேசும் பேச்சின் அடிநாதம் என்பதை பேச்சைக்கேட்பவர்கள் கூர்ந்துகேட்கும் போதே உடனுக்குடன் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால், அந்தப் பேச்சின் வெற்றியே தலைவன் சொல்வதை கேட்பவர்கள் அதை முழுமையாக கேட்டு, நம்பி அதற்குண்டான நடவடிக்கைதனில் ஈடுபட்டால்தான் கிடைக்கும் இல்லையா? என்று கேட்கின்றார் ஆசிரியர். 

தலைவனின் சொல்வன்மை
தலைசிறந்த தலைவர்கள் எந்த வார்த்தையை எங்கு உபயோகப்படுத்து கின்றோம் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். வார்த்தைகளை மிகவும் திட்டமிட்டு செதுக்கி செப்பனிட்டு தங்களுடைய பேச்சில் இணைப்பார்கள் என்கின்றார் ஆசிரியர். ஏனென்றால், வார்த்தைகளே பேச்சின் கருத்தை எடுத்துச்செல்லும் வாகனமாய் இருக்கின்றது. 

கவனத்தை ஈர்ப்பதிலும், நம்பவைப் பதிலும், உளமாரவும் உணர்ச்சிப்பூர்வ மாகவும் செயல்படவைப்பதிலும் வார் த்தைகளின் பங்கு மிகமிக அதிகம் என ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர் இதனாலேயே வார்த்தைகளைத் தேர்ந் தெடுப்பதில் தலைவர்கள் அதிக கவ னத்தை மேற்கொள்ள வேண்டியிருக் கின்றது என்கின்றார். தெளிவான, பேச்சு வழக்கில் உள்ள, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சென்றடையக் கூடிய, அலங்காரமான, வலிமையான வார்த்தைகளே சொல்லும் விஷயத்தை அதிரடியாய் கேட்பவரிடத்தில் கொண்டு போய் சேர்க்கின்றது என்பதைத் தலை வர்கள் தெளிவாய்ப் புரிந்துவைத்துக் கொண்டுள்ளனர் என்கின்றார் ஆசிரியர்.

‘தலைவன்டா’ என்ற எண்ணத்தை கேட்பவரிடத்தில் கொண்டுவருதல்
தலைவர்கள் ஒரு நடிகரைப் போல. அவரே சொல்லும் கருத்துக்கும் பேச்சுக் கும் உயிரைக் கொண்டுவருபவர். அது எப்படி பேச்சுக்கு உயிர்வரும் என்கின்றீர்களா? காட்டும் எனர்ஜி, கண்ணில் தெரியும் தீர்க்கம், கை மற்றும் உடல்மொழி, குரலின் ஏற்ற இறக்கம் என ஒரு நடிகராகவே மாறி தன்னுடைய பேச்சுக்கு உயிர்கொடுத்து கேட்பவர்களிடையே ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் தலைவர்கள். 

தனிமனிதர்களிடம் பேசுகின்றீர் களோ அல்லது பெரும் கூட்டத்தில் பேசுகின்றீர்களோ, பேசுவது தலைவன், அவன் நம்முடன் இருக்கின்றான், நான் அவனுடன்தான் இருப்பேன் என்பதை தெளிவாய் வெளிப்படுத்தும் அளவுக்கு உங்கள் நடவடிக்கை இருக்கவேண்டும் என்கின்றார் ஆசிரியர்.
இதெல்லாம் எழுதுவதற்கும் படிப் பதற்கும் நன்றாயிருக்கும். எப்படி இதை யெல்லாம் திட்டமிட்டுச் செய்வது. சாத்தியமில்லாததைப் போல் இருக் கின்றதே என என்னுடைய வாடிக்கை யாளர்கள் என்னிடம் கேட்டதைப் போல் நீங்கள் நினைக்கலாம் என்று சொல்லும் ஆசிரியர் தொடர்ந்து இந்த மாடலில் சொல்லப்பட்டிருப்பவற்றை செக்லிஸ்ட் போல் வைத்துக்கொண்டு உபயோகித்துவந்தால் ஒரு கால கட்டத் தில் உங்களின் வாழ்க்கை முறையாகவே அது மாறிவிடும் என்பதைத்தான் நான் அவர்களுக்கு சொல்லவும் என்னுடைய பேச்சுத்திறனால் உணர்த்தவும் செய் கின்றேன் என்கின்றார். 

எண்ணத்தை செயலாக மாற்றவும், பவர்புல்லான தலைவனாகத் திகழவும் தலைவனுக்குத் தேவையானதும் உதவு வதும் பேச்சுத்திறன் மட்டுமே. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழியினைப் பின்பற்றினால் ஓவ்வொரு முறை பேசும் போதும் நீங்கள் தலைவனாகவே உணரப்படுவீர்கள் என்கின்றார் ஆசிரியர். பின்பற்றிப் பயனடையுங்களேன்.

Tuesday 16 December 2014

பணியாளர் குறைப்பு: டிசிஎஸ் தீவிரம்

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கை வரும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. இதில் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களையும் நீக்கும் திட்டத்தில் இருக்கிறது டிசிஎஸ். அதே சமயத்தில், இந்த வருடத்தில் புதிதாக 55,000 பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் நடுத்தர வயது பிரிவு நபர்களை டிசிஎஸ் குறிவைத்திருப்பதாகத் தெரிகிறது. 20 வருட அனுபவத்துடன் 25,000-க்கும் மேற்பட்டோர் டிசிஎஸ்-ல் இருக்கிறார்கள். 

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் 3,13,757 நபர்கள் பணியில் இருக்கிறார்கள். 1990-களில் வேலைக்கு சேர்ந்த பல பணியாளர்கள், தற்போதைய சூழலுக்கு ஏற்ப தங்களை தயார் செய்துகொள்ளவில்லை. அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையெனில் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று டிசிஎஸ் நினைக்கிறது. 

பணியாளர் குறைப்பு குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள பிரிவு தலைவர் அஜோயேந்திர முகர்ஜி கூறியது; தற்போது எடுக்கப்போகும் நடவடிக்கை ஒன்றும் சிறப்பு நடவடிக்கை அல்ல, இது ஒரு தொடர் நடவடிக்கைதான். மேலும் நாங்கள் புதிதாக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல. 

வருடம் முழுவதும் தொடர்ந்து நடப்பதுதான். செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறது எங்கள் நிறுவனம். அதனால் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் செயல்பாடும் இங்கு முக்கியம். மேலும் நாங்கள் சம்பள உயர்வு பற்றியும் பேசுவோம். அப்போது பணியாளர்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வது அவசியம். 

மேலும் எவ்வளவு பேரை நீக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. அப்படி இலக்கு வைத் துக்கொண்டு நாங்கள் செயல்படவில்லை என்றார்.

Tuesday 25 November 2014

ஓட்ஸ் உண்மைகள்




ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.
 
Thanks: http://superstarready.blogspot.com/2014/11/blog-post_91.html

Sunday 12 October 2014

தடைக்கல்லும் படிக்கல்லும்

தடைக்கல்லும் படிக்கல்லும்


கெட்டதில்தான் இருக்கும் நல்லது
 
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் எப்படி உணர்ந்து அதை எப்படி அணுகுகிறோம் என்பது மிகவும் முக்கியம் என்று சொல்லும் ஹாலிடே தடைக்கல்லை படிக்கல்லாக்கும் அணுகுமுறையை நாம் கடைபிடிக்கும் போது நமக்கு சிறந்த பலமாக இது இருக்கின்றது. அதை கடைபிடிக்கத் தவறினால் அது பலவீனமாக மாறுகிறது. 

தடைகளை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பானது, நாம் அந்த தடைகளை ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் எளிமையாகவும், நேர்மையாகவும் அணுகுவதிலேயே இருக்கின்றது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல ஒவ்வொரு தடையிலும், சோதனையிலும் கண்டிப்பாக ஒரு “வெற்றி வாய்ப்பு” ஒளிந்துகொண்டிருக்கிறது என்கிறார் ரயன் ஹாலிடே. 

நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. நமது எண்ணங்களே அதை அவ்வாறாக மாற்றுகிறது என்று சொன்ன ஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டும் ஹாலிடே ஒரே சூழ்நிலை, ஒருவருக்கு பாசிடிவ்வாகவும் மற்றொருவருக்கு நெகடிவ்வாகவும் அமைவதை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம் என்கின்றார். மழை, டுவீலரில் அலுவலகம் சென்றுவரும் ஒருவருக்கு இடையூறாகத் தெரிகிறது, அந்த மழையே ஒரு விவசாயிக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் எண்ணங்களைக்கொண்டு சூழ்நிலை களையும், செயல்களையும் மதிப்பிடுங்கள் என்கிறார் ரயன் ஹாலிடே. 

எந்தவொரு சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு பொங்கிவிடக் கூடாது என்று கூறும் ஹாலிடே, உணர்ச்சிவசப்பட்டு அதன்மூலம் பீதி அடைவதனால், நாம் நமது செயலில் தவறுகளை உடனடியாகச் செய்ய ஆரம்பிக்கிறோம் என்கிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும் பீதியடை யாமலிருக்கும் கலையே அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு முதலில் கற்றுத்தரப்படுகிறது. அதனாலேயே அணுகுமுறையில் மாற்றம் செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்று கூறும் ஹாலிடே, அமெரிக்க திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஜார்ஜ் க்ளூனி சந்தித்த ஆரம்பகால நிராகரிப்பு களை வரிசையாய் நினைவுகூர்கிறார். மாறுபட்ட அணுகு முறையால் மட்டுமே அவரால் ஹாலிவுட்டில் வெற்றிபெற முடிந்தது என்கிறார். 

ட்ரை பண்ணுங்க சார்
 
தைரியத்தின் அவசியத்தை ஹாலிடே மிகவும் அறிவுறுத்திச் சொல்கின்றார். தைரியமான செயல் பாடுகள் மட்டுமே எப்போதும் நம்மை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும், அதற்காக தைரியம் என்றால் துடுக்கான, முரட்டுத்தனமான வேகம் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் ரயன் ஹாலிடே நமது செயல்களும், முடிவுகளுமே நம்முடைய வெற்றியை மட்டுமல்ல நம்மையே தீர்மானிக்கின்றன என்கிறார். ஒரு இலக்கை நோக்கி நாம் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும் நேரம், எதிர்கொள்ளும் தடைகளால் கோபமடைந்து, என்ன செய்வதென்றே தெரியாமல் அமைதியாக இருந்து விடக்கூடாது. 

மேலும், மேலும் முயற்சி செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படி முயற்சி செய்யத் தவறும்போது நாம் ஒரு அடி கூட முன் வைக்க முடியாமல், இருக்கும் அதே நிலையிலேயே இருந்துவிடுவோம். அது கூடப் பரவாயில்லை. ஏன் இப்படியே போனால் ஒரு ஸ்டேஜில் வேறு எந்த ஒரு காரியத்தையும் - ஏன் எதையுமே செய்ய முடியாத நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டு விடுவோம் என்று எச்சரிக்கிறார் ரயன் ஹாலிடே. 1878-ல் மின்சாரத்தின் மூலம் எரியும் பல்பை கண்டுபிடிக்க ஒரு கூட்டமே முயற்சித்துக்கொண்டு இருந்தது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மெட்டீரியலினால் ஆன இழைதனைக் கொண்டு பல்பை தயாரிக்க முயன்று கொண்டும் அதில் தோல்வியடைந்துகொண்டும் இருந் தார்கள். ஆனால் தாமஸ் ஆல்வா எடிசன் மட்டுமே சுமார் ஆறாயிரம் வகை மெட்டீரியல்களினால் ஆன இழைகளை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக டெஸ்ட் செய்ய தயாராக இருந்தார். ஒவ்வொரு முறையும் தீர்வை நோக்கி சென்று தோல்வியுற்று மீண்டும் மற்றொன்றின் மூலம் முயற்சி செய்து இறுதியாக டங்க்ஸ்டன் இழையை உபயோகித்து பல்பை எரிய வைத்து வெற்றியும் பெற்றார். 

ஒரு செயலில் முயற்சிசெய்து சில தடைகளினால் தோல்வியடைகின்றீர்கள், அந்தச் செயலை அத்தோடு விட்டுவிடாமல் தொடர்ந்து சிந்தித்து மேம்படுத்தப்பட்ட புதிய முறையில் அப்ரோச் செய்யும்போது அந்த தோல்வியே வெற்றிக்கு உண்டான மூலதனமாக மாறுகின்றது. ஒவ்வொரு முறை தோல்வியின்போதும் நமக்கு ஒரு புது வாய்ப்பு கிடைக்கிறது, அதாவது தடைகளே வழிகளாக மாறுகின்றன. அப்புறமென்ன ட்ரை பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதானே!. 

தோல்வியே அதிகம் பரிசோதிக்கப்படுகின்றது
 
முற்காலத்தில் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் யூகத்தின் அடிப்படையிலேயே கஸ்டமர்களின் தேவைகளை அறிந்து அதனை தயாரித்து கொடுத்துவந்தன. எத்தனை யோ புராடக்ட்கள் லாஞ்ச் செய்யப்பட்ட நாளிலேயே பிளாப் ஆன செய்திகளைப் பார்த்திருக்கிறோம். அந்த நிமிடமே புராடக்ட்டுக்காக செய்யப்பட்ட அத்தனை உழைப்பும் வீணாகிறது. ஒருவேளை அது வெற்றி அடைந்திருந்தால், அந்த வெற்றிக்குப்பின்னால் இருக்கும் செயல்களை நிறுவனத்தில் யாரும் பெரிதாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. 

ஆனால் தோல்வி அடைந்ததால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து, மாறுதல்கள் பல செய்து மீண்டும் கஸ்டமர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சியெடுக்கின்றார்கள். வெற்றி களைவிட தோல்விகளே அதிகம் கவனிக்கப்பட்டு வலிமையடை கிறது என்பது இதிலிருந்து தெரிகின்ற தில்லையா என்கின்றார் ஹாலிடே. 

என்னவொரு தைரியம்
 
வாழ்க்கையில் நடக்குற ஒவ்வொரு நிகழ்வையும் லவ் பண்ணுங்க, அது நல்லதோ கெட்டதோ, அந்த நேரத்தில் அதை என்ஜாய் செய்துவிடவேண்டும். மேலும் அதற்கான மனவலிமையும் வேண்டும். தனது 67வது வயதில், தாமஸ் எடிசன் ஒரு நாள் மாலை தன் ஆய்வுக்கூடத்திலிருந்து வீடு திரும்பி டின்னரை முடித்த சிறிது நேரத்தில், தனது ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதை தெரிந்துக்கொள்கிறார். தீயணைப்பு வண்டிகள் பல வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. பல கெமிக்கல்கள் சேர்ந்து மஞ்சள் பச்சை என தீயானது கலர் கலராக எரிந்துகொண்டிருந்தது.

வேகமாக அங்கு வந்த எடிசன் தன் மகனிடம் உடனே போய் உன் அம்மாவையும், அவளோட நண்பிகளையும் அழைத்துக் கொண்டுவா என்றார். ஏன் தெரியுமா? இதுபோன்ற தீ விபத்து நிகழ்வை மறுபடியும் அவர்களால் ஒருபோதும் பார்க்கமுடியாது என்பதால்தான். அவரைப்பொருத்தவரை விபத்து நடந்துவிட்டது, அதை இனி தடுக்க முடியாது அதேசமயம் அதை என்ஜாய் பண்ணுவதை இழக்கவும் அவர் விரும்பவில்லை.
முறையான அணுகுமுறை, அதற்கேற்ற செயல்பாடு மற்றும் மனவலிமை மூன்றும் சேரும்போது எளிதாக தடைகளை படிகளாக மாற்றி வெற்றிபெற முடியும் என்பதே இந்த புத்தகத்தின் மூலம் ரயன் ஹாலிடே நமக்கு சொல்லும் செய்தி.

Monday 15 September 2014

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.
 
தன்னம்பிக்கைக்கான பண்புகள்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

 1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.
2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.
3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள். 

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். 

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது. 

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும். 

தொடர் முயற்சி
ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண
ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். 

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்! 

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம். 

பரவலாகவா, ஆழமாகவா?
பலர் நிறையப் படிப்பது எங்காவது பயன்படும் என்று ஸ்திரமாக நம்புகிறார்கள். என் அறிவுரை இதுதான்: நிறையப் பாடங்களைப் பரவலாக மேம்போக்காகப் படிப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாகத் தொடர்ந்து படியுங்கள். பட்டத்தைவிடப் பாட அறிவும், செய்திறனும், அதனைச் சந்தைப்படுத்தும் முறைகளும் முக்கியம்.
எது படித்திருந்தாலும் அத்துறையில் வந்த புது விஷயங்களைத் தொடர்ந்து படித்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுதான் நிஜமான அறிவு. பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் அல்ல. 

பெருங்காய டப்பாவா?
நீங்கள் செய்யும் வேலை தான் உங்கள் அறிவையும் திறனையும் வெளிப்படுத்தும். நீங்கள் என்றோ வாங்கிய பட்டங்கள் முன்பு பயன்பட்டது போல வருங்காலத்தில் பயன்படாது.
முன்பெல்லாம் ஒரு முறை படித்து விட்டு ஒரு முறை வேலைக்கு சேர்ந்தால் அது காலம் முழுதும் கை கொடுக்கும். இன்று படிப்பு, வேலை, தொழில் அனைத்தும் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கற்க வேண்டிய வித்தையாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை!
உங்கள் படிப்பு காலி பெருங்காய டப்பாவா அல்லது அட்சயப் பாத்திரமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!! 

மென் திறன்கள்
மென் திறன் தகுதிகள் என்பது, படிப்பைத்தவிர, உங்களுடைய பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, நம்பகத்தன்மை, உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லவரா, நீங்கள் பயந்தாங்கொள்ளியா, பொது இடங்களில் பேசுவதற்குக் கூச்சப்படுவீர்களா, எதிர் பாலினத்தவரிடம் பேச யோசிப்பீர்களா போன்றவையாகும். 

இது தவிர, நேரக்கட்டுப்பாடு, எதுவும் முடியும் என்ற பாசிட்டிவ்வான எண்ணம், கூர்ந்து கவனிக்கும் திறன், உங்களுடைய ஆளுமைத் திறன், தன்னையும் மற்றவரையும் எந்நேரமும் உத்வேகப்படுத்துதல் உள்ளிட்டவையே. இன்றைய சூழ்நிலையில் அவசியமாகின்றன.
இந்தத் தகுதிகள் அனைத்து மனிதர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு இருந்தே ஆக வேண்டும்.
# யதார்த்தமாக வாழப் பழகிக்கொள்வது
# கல்வியோடு கூட மென் திறன்களையும் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது
# நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கை
என்ற மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.


Sunday 11 May 2014

மே 14 முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இம்மாதம் 14ல் துவங்குகிறது. ஜூன் 2ம் தேதிக்குள், விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதுதவிர 13 சுயநிதி கல்லூரிகளில் இருந்தும், 860க்கும் மேலான இடங்கள் மாநில ஒதுக்கீடாக கிடைக்கும்.

இந்த இடங்களுக்கு, கட் -ஆப் மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணி, மே 14ல் துவங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தால் போதும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை, www.inhealth.org, www.tn.gov.in என்ற இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணித ஈடுபாடு இல்லையெனில் இன்ஜி., பக்கம் போக வேண்டாம்: ரைமண்ட் உத்திரியராஜ்

சென்னை: இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்லூரி தேர்வுதான் முக்கியம்; அதில் கவனமாக இருங்கள். கணக்கு, எனக்கு சரிப்பட்டு வராது என நினைப்போர், இன்ஜி., படிப்பை தேர்வு செய்ய வேண்டாம் என தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் பேசினார்.


கணக்குதான் முக்கியம்

அண்ணா பல்கலையின், தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் ஆலோசனை வழங்கி பேசியதாவது: பிளஸ் 2 முடிந்து நிறைய மதிப்பெண் வந்துவிட்டது. 14 ஆண்டு பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்குள் நுழைகிறீர்கள். கணக்கு எனக்கு வராது, எப்படியோ படித்து மதிப்பெண் பெற்று விட்டேன் என நினைப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய வேண்டாம். இன்ஜி., படிப்புக்கு கணக்குதான் முக்கியம். கணக்கில் நல்ல ஈடுபாடு இருந்தால்தான் இன்ஜி., படிப்பு வரும்.

பாடம் படிக்க, நடத்தும் ஆசிரியர்கள் முக்கியம். அதனால், இன்ஜினியரிங்கில் எந்த பிரிவு எடுப்பது என்பதை விட, நல்ல கல்லூரிகளை தேர்வு செய்வது அவசியம். கவர்ச்சி விளம்பரங்களை நம்ப வேண்டாம். கல்லூரி முதல்வர், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அந்த கல்லூரியில் வேலை செய்கிறாரா; பேராசிரியர்கள் நீண்ட காலம் பணியாற்றுகிறார்களா? என்று பாருங்கள். இவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு இருந்தால், நிர்வாகம் சரியில்லை என்றே அர்த்தம்.

படிப்புக்கு ஏற்ற சோதனைக் கூடங்கள் உள்ளதா? கல்லூரிகளில் படித்தோருக்கு வேலை வாய்ப்புத்திறன் எப்படி உள்ளது; காலத்திற்கேற்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளதா? மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வாய்ப்புகள்; நான்கு ஆண்டுகளுக்குப் பின் தன் சுய விவரத்தில் (Resume) மதிப்பீடு அதிகரிக்க முடியுமா? போதிய வசதிகள் உள்ளதா; பேராசிரியர்-மாணவர்கள் நட்பு எப்படி உள்ளது என்றெல்லாம் விசாரியுங்கள்.


நீங்கள் விரும்பும் பிரிவு

எது, எதற்கோ நேரத்தை செலவிடுகிறோம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் படிப்பில் சேர, நல்ல கல்லூரியை கண்டறிய நேரம் செலவிடுங்கள். 10 கல்லூரிகளை தேர்வு செய்து நேரில் போய் பாருங்கள். மூன்று, நான்காம் ஆண்டு படிப்போரிடமும் விசாரித்து, மதிப்பீடு செய்து, ஆறு கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள். நீங்கள் விரும்பும் பிரிவு எந்த கல்லூரியில் கிடைக்கிறதோ அதில் சேருங்கள். மேலும் தேர்வு செய்யும் கல்லூரியின் கட்டணத்தை, நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நம்மால் கட்ட முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். இப்படி ஒரு மதிப்பீடு செய்துவிட்டால் கவுன்சிலிங் எளிதாகிவிடும்.


நல்ல கல்லூரி எது?

கவுன்சிலிங் மையத்திற்கு போய், கம்ப்யூட்டர் ஆபரேட்டரிடம், எந்த கல்லூரி சேரலாம் என கேட்காதீர்கள். அவர்கள் ஆபரேட்டர்கள்தான். எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் இல்லை என்றால், அடுத்த நல்ல கல்லூரி எது என தேர்வு செய்ய வேண்டும். கூட அழைத்துச் செல்பவர், உங்களின் நலன் சார்ந்தவராக இருக்கட்டும். பெற்றோரைத் தவிர, உங்கள் நலன் சார்ந்தோர் யாரும் இருக்க முடியாது. கல்லூரிகள் தேர்வில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கவுன்சிலிங்கிற்காக இரண்டு மாதங்கள் உழைத்த உழைப்பு வீணாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

Thursday 16 January 2014

நேர்முகத் தேர்வு - முக்கிய கேள்வி


பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம் எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும், நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
ஆனால் அதுபோன்ற கேள்விக்கு, "என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை என்றும், கமிட்டி உறுப்பினர்கள்தான், நேர்முகத் தேர்வில் கேள்விகளை கேட்க வேண்டும்" என்ற பதிலை கட்டாயம் சொல்லக்கூடாது.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, முடிந்தளவு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால், அதுபோன்ற நேரங்களில் தரப்படும் வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளை கேட்டு அவர்களை ஆச்சர்யப்பட வைக்க முடியும். இதனால் உங்களின் முக்கிய சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

நிறுவனத்தின் நடப்பு புராஜெக்ட்டுகள், எதிர்கால திட்டங்கள், நீங்கள் பணியமர்த்தப்படக்கூடிய இடம் மற்றும் பணியில் சேர வேண்டிய தேதி(தேர்வு செய்யப்பட்டால்) போன்றவை கேட்கப்படக்கூடிய சில முக்கிய கேள்விகள்.

மன அழுத்த சூழல்கள்
நேர்முகத் தேர்வின்போது, பல தேர்வு கமிட்டி உறுப்பினர்கள், கலந்துகொள்ளும் நபரிடம் மனஅழுத்தத்தை உண்டாக்க முயல்வார்கள். இதன்மூலம் அவர் எவ்வாறு react செய்கிறார் என்பதை அறிந்துகொள்வது அவர்களின் நோக்கம்.

ஏனெனில், ஒரு நிறுவனப் பணி என்பது, ரோஜா மெத்தையில் படுத்திருப்பது போன்றதோ அல்லது தென்றலில் இளைப்பாறுவது போன்றதோ அல்ல. அதிக சவால்களும், நெருக்கடிகளும், இக்கட்டான சூழல்களும் நிறைந்தது. இதற்கேற்ப ஒரு பணியாளர் தயாராக இருக்க வேண்டியது முக்கியம்.
எனவே, உங்களிடமிருந்து சரியான reaction வருகிறதா என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். வருங்காலத்தில், பணியமர்த்தப்படக்கூடிய ஒருவரின் மனநிலையை சரியாக அறிந்துகொள்ளும் வகையில், Electro encephalograph போன்ற மருத்துவ உபகரணங்களை நிறுவனங்கள் பயன்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதுபோன்ற சோதனையில், நீங்கள் வாயைத் திறந்து எதையும் பேசவில்லை என்றாலும்கூட, உங்களின் மாறும் முகபாவனைகள், உங்களின் உடல் மொழிகள் போன்றவற்றை ஆராய்ந்து அவர்கள் மனநிலையை கணித்து விடுவார்கள்.

ஒரே நேரத்தில்...
உங்களின் மனவலிமையை அறியும் சோதனையில், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஒருவர் பின் ஒருவராக உங்களிடம் கேள்விகளை கேட்காமல், ஒரேநேரத்தில், பலவிதமான கேள்விகளை அனைவரும் கேட்பார்கள்.
இதுபோன்ற சூழலில், நீங்கள் இப்படி சொல்லக்கூடாது, "இப்படி கேட்டால் நான் எதற்கு பதில் சொல்வது? என்னால் பதில் சொல்ல இயலாது. தயவுசெய்து ஒவ்வொன்றாக கேளுங்கள்" என்பதுதான் அது.
மேலும், முக்கிய அம்சம் என்னவென்றால், உங்களின் முக பாவனையை கடுமையாகவும், குழப்பமாகவும் மாற்றி வைத்துக்கொள்ளக்கூடாது. உடலில் கலவரம் இருக்கக்கூடாது. நீங்கள் ஏதோ இக்கட்டில் மாட்டிக் கொண்டதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.

ஏனெனில், நேர்முகத் தேர்வு என்பது போர்க்களமல்ல. உங்களை சோதிக்கும் ஒரு களம்தான் என்பது எப்போதுமே மனதில் இருத்தப்பட வேண்டும்.
மாறாக, நீங்கள் இவ்வாறு கூறவேண்டும், "நீங்கள் அனைவரும் கேட்ட கேள்விகளில், இந்த கேள்விக்கு முதலில் பதிலை சொல்கிறேன். பிறகு இந்த கேள்விக்கும், அதனையடுத்து, மற்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்" என்று எந்த பதட்டமும் இல்லாமல், மிருதுவாக கூற வேண்டும்.

இதைத்தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பார்கள். நேர்முகத் தேர்வு எவ்வளவு நேரம் நீடித்தாலும், நீங்கள் எந்தவித எரிச்சலையோ, சலிப்பையோ அல்லது சோர்வையோ, எந்த வகையிலும் கட்டாயம் வெளிப்படுத்தவேக் கூடாது. அப்படி வெளிக்காட்டினால், அதுவே தகுதியிழப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

ஒரு முக்கிய தாரக மந்திரத்தை நினைவில் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியம். அது நேர்முகத் தேர்வுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை முழுவதற்கும்தான்.

"எப்போதும் உனது நிதானத்தை இழந்துவிடாதே" என்பதுதான்.

Tuesday 7 January 2014

புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படித்தால் சம்பளம் எவ்வளவு?

ஐ.ஐ.எம்., போன்ற நாட்டின் முதல்தர வணிகப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் பிரதான இலக்கு, படித்து முடித்து பல லட்சங்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே.

எனவேதான், அத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதற்கு, கேட் போன்ற தேர்வுகளை ஆர்வமாக எழுதுகிறார்கள். இக்கட்டுரையில், நாட்டின் பிரதான வணிகப் பள்ளிகளில் படிப்பவர்கள், சராசரி அளவில் மற்றும் உயர்ந்தபட்ச அளவில் எந்தளவு அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது.


வணிகப் பள்ளி சராசரி சம்பளம் உயர்ந்தபட்ச சம்பளம்
ஐ.ஐ.எம்., பெங்களூர் ஆண்டிற்கு ரூ.17.30 லட்சம் தகவல் இல்லை
மேலாண்மைத் துறை, டில்லி பல்கலை ஆண்டிற்கு ரூ.16 லட்சம் தகவல் இல்லை
எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஜாம்ஷெட்பூர் ஆண்டிற்கு ரூ.16.02 லட்சம் தகவல் இல்லை
மேலாண்மைத் துறை, ஐ.ஐ.டி., டில்லி ஆண்டிற்கு ரூ.12.03 லட்சம் ஆண்டிற்கு ரூ.18 லட்சம்
ஐ.ஐ.எப்.டி., டில்லி ரூ.12.40 லட்சம் ரூ.22 லட்சம்
எஸ்.பி.ஜே.ஐ.எம்.ஆர்., மும்பை ரூ.16.13 லட்சம் தகவல் இல்லை
என்.எம்.ஐ.எம்.எஸ்., மும்பை ஆண்டிற்கு ரூ.14.40 லட்சம் ஆண்டிற்கு ரூ.30 லட்சம்
ஐ.ஐ.எம்., இந்தூர் ஆண்டிற்கு ரூ.12 லட்சம் தகவல் இல்லை
ஐ.ஐ.எம்., கோழிக்கோடு ஆண்டிற்கு ரூ.12.31 லட்சம் ஆண்டிற்கு ரூ.32 லட்சம்
ஐ.ஐ.எம்., ராஞ்சி ஆண்டிற்கு ரூ.12.04 லட்சம் ஆண்டிற்கு ரூ.19 லட்சம்
ஐ.ஐ.எம்., ராய்ப்பூர் ஆண்டிற்கு ரூ.12.03 லட்சம் ஆண்டிற்கு ரூ.19 லட்சம்
ஐ.ஐ.எம்., ஷில்லாங் ஆண்டிற்கு ரூ.11.75 லட்சம் ஆண்டிற்கு ரூ.22 லட்சம்
ஐ.ஐ.எம்., திருச்சி ஆண்டிற்கு ரூ.10.92 லட்சம் ஆண்டிற்கு ரூ.18.25 லட்சம்
மேலாண்மைத் துறை, ஐ.ஐ.டி., சென்னை ஆண்டிற்கு ரூ.9 லட்சம் ஆண்டிற்கு ரூ.14 லட்சம்
வி.ஜி. மேலாண்மை பள்ளி, ஐ.ஐ.டி., காரக்பூர் ஆண்டிற்கு ரூ.10.45 லட்சம் தகவல் இல்லை
ஐ.ஆர்.எம்.ஏ ஆண்டிற்கு ரூ.7 லட்சம் ரூ.13.05 லட்சம்
எக்ஸ்.ஐ.எம்.பி PGDM BM - ஆண்டிற்கு ரூ.11.81 லட்சம்
PGDM HRM - ஆண்டிற்கு ரூ.9.04 லட்சம்
PGDM BM ஆண்டிற்கு ரூ.17.25 லட்சம்
PGDM HRM ஆண்டிற்கு ரூ.14.03 லட்சம்
எக்ஸ்.ஐ.எஸ்.எஸ் ஆண்டிற்கு ரூ.6.75 லட்சம் ஆண்டிற்கு ரூ.12.50 லட்சம்