Tuesday 17 September 2013

விமான பயணம் கேள்வி-பதில்

ஆகாயத்தில் அதிசயமாக நாம் பார்ப்பதில் முக்கிய இடம் பிடிப்பது விமானங்கள்தான். சில வேளைகளில் அழியாத நெடுங்கோடாகப் புகை விட்டுக்கொண்டு பறக்கும் ஜெட் விமானங்கள் என்றால் சில நேரங்களில் நமக்கு ஓசைகூட கேட்கும் அல்லது கேட்பது போன்ற பிரமை ஏற்படும். வலவன் ஏவா வானவூர்தி அல்ல என்றாலும் அதில் ஏறிப் பயணம் செய்யாதவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏறிச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுவது இயற்கைதான். ஆனால், அதில் அடிக்கடி சென்று பயணப்பட்டவர்களுக்கோ சில - பல சந்தேகங்கள் தோன்றித் தோன்றி மறையும். ஆசையாகவும் மகிழ்ச்சியாகவும், சில வேளைகளில் அச்சத்துடனும் விமானங்களில் செல்வோரே அதிகம். அவர்களில் பலருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை தருகிறார் விமானி பேட்ரிக் ஸ்மித். ‘காக்பிட் கான்பிடன்ஷியல்’ என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் தகவல்கள் அனைவருக்குமே பொதுவானவை. பயணிகளின் சந்தேகங்களுக்குக் கேள்வி-பதில் வடிவில் அவர் சில விளக்கங்களைத் தந்திருக்கிறார். 

விமானம் பறக்கும்போது திடீரென தூக்கித்தூக்கிப் போடுவதும் அப்படியும் இப்படியும் அலைக்கழிப்பதும் குலுங்குவதும் என்னைக் குலைநடுங்கச் செய்கிறது, செத்துவிடுவோமோ என்றுகூட அஞ்சுகிறேன், இந்த அச்சம் நியாயமானதுதானே? 

இல்லை. விமானத்தை அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடும்படியோ, விண்ணிலிருந்து வீசி எறியும் வகையிலோ எதுவும் நடந்துவிடாது.காற்றழுத்தம் குறைவான வான் பகுதியில் விமானம் செல்லும்போது குலுங்குவது இயல்பானது. அது உங்களுக்கு அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம், ஆனால் அதனால் விமானம் கீழே விழுந்துவிடாது. 

ஜெட் விமானத்தின் எல்லா இன்ஜின்களும் செயலிழந்துவிட்டால் விமானத்தால் பத்திரமாகத் தரை இறங்க முடியுமா? 

முடியும். மலையிலிருந்து கீழே இறங்கும்போது உங்களுடைய கார் இன்ஜினை அணைத்துவிட்டால் எத்தனை ஆபத்தோ அத்தனை ஆபத்து இதில் இருந்தாலும் விமானத்தைத் தொடர்ந்து இயக்கவும் தரையில் இறக்கவும் முடியும். 

விமானத்திலிருந்து எரிபொருளைக் கொட்டிவிட முடியும் என்று தெரிகிறது, விமானம் இறங்கும்போது எடை குறைய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்களா? 

ஆமாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்ல. விமானம் மேலே எழும்போது இருக்கும் எடையைவிட கீழே இறங்கும்போது இருக்கும் எடையானது அதற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நெருக்கடியான நேரங்களில் அந்த நெருக்கடியைக் குறைக்க எரிபொருள் வெளியே கொட்டப்படுகிறது. இது அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய விமானங்களில்தான் சாத்தியம். சிறிய ரக விமானங்களில் கூடுதல் எரிபொருள் தீரும்வரை வானில் வட்டமடித்த பிறகே தரையில் இறக்குவார்கள். 

விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அதை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்? 

ஒரு சேதமும் ஏற்படாது. விமானத்தின் அலுமினியத்தாலான உடல் அதைக் கடத்திவிடும். 

விமானம் பறக்கும்போது கழிப்பறையில் உள்ளவை கீழே கொட்டிவிடுமா? 

இல்லை. விமானக் கழிப்பறையில் சேரும் கழிவுகள் விமானத்தின் கடைசிப் பகுதியில் உள்ள கழிவுத் தொட்டிக்கு அவ்வப்போது சென்றுவிடும். அது வெளியே சிந்தாது, சிதறாது. 

விமானி அறையிலிருந்து வரும் மணியோசைக்கு என்ன அர்த்தம்?

 இரு விதமான தேவைகளுக்காக மணியை ஒலிப்போம். முதல் வகை, இன்டர்காமில் பேசுங்கள் என்று விமானப் பணிக்குழுவினரை அழைப்பதற்காக. இரண்டாவது, விமானம் 10,000 அடி உயரத்தை எட்டிய பிறகு சீட் பெல்டைப் பயணிகள் தளர்த்தலாம் என்று அறிவிப்பதற்காக, மீண்டும் தரை இறங்குவதற்கு முன்னால் சீட் பெல்டைப் போடுங்கள் என்று கூறுவதற்காக. சில வேளைகளில் சீட் பெல்டை யாராவது போடவில்லை என்பதை எங்கள் முன்னால் உள்ள விளக்கு எரிந்து எச்சரித்தால் விமானப் பணிக்குழுவினருக்கு அதைத் தெரிவிப்பதற்காகவும். 

சில விமான நிலையங்களுக்கு 3 எழுத்தில் நீங்கள் வைத்திருக்கும் பெயர்கள் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றனவே? 

சிலரை நினைவுகூர்வதற்காகவும் சில வேளைகளில் ஆபாசமான பொருள் தரும் வாசகங்களைத் தவிர்ப்பதற்காகவும் விமான நிலையங்களின் பெயர்களைச் சுருக்குகிறார்கள், அது விமானிகளுடைய பயன்பாட்டுக்கானது, பயணிகள் அதுகுறித்துக் கவலைப்பட ஏதும் இல்லை. 

நவீன ரக விமானங்கள் அதுவாகவே பறந்துவிடுமாமே? 

நிச்சயம் இல்லை. மருத்துவமனைகளில் கட்டப்படும் நவீன அறுவைக்கூடமே நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்துவிடுமா என்ன? 

விமானம் பறக்கத் தொடங்கும்போதும் தரை இறங்கும்போதும் பயணிகள் தங்களுக்கு முன்னால் இருக்கும் சீட் டிரேக்களை மூடி வைக்க வேண்டும், விளக்குகளின் வெளிச்சத்தைக் குறைக்க வேண்டும், சீட் பெல்டுகளைப் போட வேண்டும். கண்ணாடிகளைத் திரைபோட்டு மூட வேண்டும் என்றெல்லாம் ஏன் கழுத்தறுக்கிறீர்கள்? 

விமானம் திடீரென தன்னுடைய வேகத்தை இழந்தால் இருக்கையிலிருந்து நீங்கள் முன்னே வீசப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது நீங்கள் நிலைகுலையாமல் இருக்கவும் முன்புற சீட்டின் பின்னால் போய் முட்டிக்கொள்ளாமல் இருக்கவும் சீட் பெல்ட் போட்டு டிரேயை மூடி வைக்குமாறு கூறுகிறோம். விளக்கு வெளிச்சத்தைக் குறைப்பதும் கண்ணாடிகளின் திரையைப் போடுவதும் விமானத்துக்குள் ஏதாவது பறந்து விழுகிறதா, நெருப்புப் பிடித்து எரிகிறதா என்று விமானப் பணிப்பெண்கள் எளிதாகப் பார்ப்பதற்காகத்தான். இது பாதுகாப்பு நடவடிக்கை, பயணிகளின் நலனில் அக்கறை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. 

விமானம் பறக்கும்போது பயணிகள் நன்றாகத் தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்துக்குள் ஆக்சிஜன் அளவு குறைக்கப்படும் என்கிறார்களே? 

சுத்த அபத்தம், அப்படி எங்கும் செய்வதில்லை. 

விமானம் பறக்கும்போது பயணி யாராவது கிறுக்குப்பிடித்து கதவைத் திறந்துவிட வாய்ப்பு இருக்கிறதா? 

விமானம் பறக்கும்போது கதவுகளையோ அவசர வழிகளையோ யாராலும் திறக்க முடியாது. விமானி அறையில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு அதை அனுமதிக்கவே அனுமதிக்காது. 

கைபேசிகளும் மடிக்கணினிகளும் ஆபத்தானவையா? 

அது நேரத்தையும் சூழலையும் பொறுத்தது. கைபேசிகளைக் கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யலாம் என்பதும் ஒரு காரணம். பல வேளைகளில் சோம்பேறித்தனத்தாலோ, இறங்கி வீட்டுக்குப் போகும் அவசரத்திலோ சில பயணிகள் கைபேசிகளை மறந்து விமானத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இது தற்செயலா, திட்டமிட்டா என்று தெரியாதபோது பதற்றம் ஏற்படுகிறது. எனவேதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. விமானம் உயரக் கிளம்பும்போதோ தரை இறங்கும்போது அதில் ஏற்படும் வேக மாறுதல்களின்போது மடிக்கணினி கையிலிருந்து நழுவி வெகு வேகமாகப் பறக்கத் தொடங்கலாம். அப்போது அது யார் மீதாவது பட்டால் விபரீத விளைவுகள் ஏற்படலாம்.டேப்லட்டுகள், மின் புத்தகங்கள் போன்றவற்றை விமானிகளே இப்போது விமானத்துக்குள் பயன்படுத்துவதால் அவற்றின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாமா என்று விமானப் பயண நிர்வாகிகள் சிந்தித்துவருகின்றனர்.

Wednesday 28 August 2013

எம்.பி.ஏ - ஐ.டி. படியுங்கள். வேலை வாய்ப்பை பெறுங்கள்.


உங்களுக்கு மென்பொருள், தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்பு போன்ற அம்சங்களில் ஆர்வம் இருக்கலாம். ஆனால், இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு, மேலாண்மை திறன் இல்லையெனில், கார்பரேட் உலகில் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.

இந்தியாவில், பலருக்கும் இருக்கும் ஒரு மோகம் எம்.பி.ஏ., மோகம். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், கார்பரேட் நிறுவனங்களில் வேலை பெறுவதற்காக, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேரும் ஆர்வம் எப்போதுமே அதிகமிருக்கும்.

தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தாங்கள் பணிக்கு எடுக்கும் ஒருவர், வெறும் மேலாண்மைத் திறனை மட்டும் பெற்றவராகவோ அல்லது வெறும் தொழில்நுட்பத் திறனை மட்டும் பெற்றவராகவோ இருப்பதை விரும்பவில்லை. மாறாக, அந்த இரண்டு திறன்களையும் ஒருங்கே பெற்றவரையே பணியமர்த்த விரும்புகின்றனர். அவர்களுக்கான சம்பளத்தையும் கேட்கும் அளவிற்கு தருவதற்கு தயாராக உள்ளனர்.
ஒவ்வொரு வணிக செயல்பாடும், வலுவான ஐ.டி., அடிப்படையை தேவையாகக் கொண்டுள்ளன. இதன்மூலம்தான், உச்சகட்ட போட்டியில் நாம் தோற்காமல் இருக்க முடியும். பெரியளவிலான வணிக செயல்பாட்டிற்கு, பெரியளவிலான ஐ.டி. ஆதரவு தளம் தேவை. எனவே, இந்த உலக சூழலை உணர்ந்து, மேலாண்மை கல்வி நிறுவனங்கள், அதற்கேற்ற வகையில், ஒரு படிப்பை அறிமுகம் செய்துள்ளன. அந்தப் படிப்புதான், MBA - IT (MBA in Information Technology).

இப்படிப்பு, வணிக மேலாண்மைத் திறன்களுடன், அடிப்படை ஐ.டி. திறன்சார் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலாண்மை மற்றும் ஐ.டி. திறன்களை ஒருங்கேப் பெற்று, ஒரு நிறுவனத்தின் வியூகரீதியிலான இலக்குகளின் நேர்த்தியை அதிகரிக்கும் வகையிலான எதிர்கால வணிக தலைவர்களை உருவாக்கும் வகையில் இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிடல், வடிவமைத்தல், தேர்வு செய்தல், ஐ.டி. வள ஆதாரங்களை பயன்படுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல விஷயங்களை இப்படிப்பு கற்றுத் தருகிறது. மேலும், மேலாண்மை கோட்பாடுகள், டேட்டாபேஸ் மேலாண்மை அமைப்பு, வணிக நுண்ணறிவு, நெட்வொர்க் இயக்கம், மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, சிஸ்டம் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு, மென்பொருள் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் வியூகரீதியான மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இப்படிப்பில் இடம்பெற்றுள்ளன.

இப்படிப்பில், வணிக அறிவைப் பெற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், ஐ.டி. கட்டமைப்பை பற்றியும், தேவைப்படும் அளவிற்கு விஷயங்களை இப்படிப்பை மேற்கொள்வோர் கற்றுக்கொள்ளலாம். இப்படிப்பில், மேலாண்மை மற்றும் நிதி கருத்தாக்கங்கள் பற்றிய தியரி அறிவை நீங்கள் பெறுகிறீர்கள் மற்றும் ஐ.டி. துறையில் புதிதுபுதிதாக ஏற்பட்டுவரும் மாற்றங்களை புரிந்துகொள்ளும் வகையிலான சூழல் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்படும்.

ஏற்கனவே தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும், அதேசமயம் மேலாண்மைத் திறன் குறைவாக இருக்கும், ஏற்கனவே மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து, அதேசமயம் தொழில்நுட்பத் திறன்கள் சற்று குறைவாக இருக்கும் நபர்கள், இந்தப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளலாம்.

MBA - IT படிப்பின் விபரங்கள்
இரண்டு வருட முதுநிலை படிப்பான இது, மொத்தம் 4 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தகுதிகள்
* 10+2 முடித்திருக்க வேண்டும்
* இளநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்களை தேர்வுசெய்யும் முறை
MAT
CAT
XAT
PGCET
ATMA
ICET
SNAP
மேற்கூறிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் பெற்ற மதிப்பெண்கள், குழு கலந்தாய்வு(GD) மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் ஒருவரின் செயல்பாட்டுடன் மதிப்பிடப்படும்.

MBA - IT படிப்பானது, MCA மற்றும் MSc IT ஆகிய படிப்புகளிலிருந்து வேறுபட்டது. எம்.பி.ஏ படிப்பை பொறுத்தவரை, ஐ.டி. துறையிலுள்ள மேலாண்மை அம்சங்களை அறிந்துகொள்வதோடு, புதிய ஐ.டி. டிரென்டுகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், MCA, MSc IT போன்ற படிப்புகள் வெறும் தொழில்நுட்பம் சம்பந்தமாக மட்டுமே தெளிவாக கற்றுத் தருகின்றன. இந்த இரண்டு படிப்புகளையும் மேற்கொள்வோர், C++, Java மற்றும் இதர ப்ரோகிராமிங் மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

வேலை வாய்ப்புகள்
ஐ.டி. தொழில்துறை பெரியளவில் வளர்ந்து வருகிறது. அந்த ஐ.டி. நிறுவனங்கள், தங்களுக்கான மேலாளர்களை எதிர்பார்க்கின்றன. அந்த மேலாளர்கள், நிறுவனத்தின் இலக்குகளை அடைய, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், தரத்தில் சற்றும் குறைவில்லாமல், அதிக உற்பத்தியை தந்து, நிறுவனத்தின் இலக்குகளை அடைய உதவக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

தொழில்நுட்ப அறிவுடன், மேலாண்மை அறிவையும் கொண்டவர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தை மதிப்பு, கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. MBA - IT படித்தவர்களுக்காக காத்திருக்கும் சில வகை பணி வாய்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கு சிறந்த ஐ.டி. அறிவு இருந்து, ப்ரோகிராமிங் தொடர்பான திறமைகள் இருந்தால், MBA - IT அவருக்கு ஏற்ற படிப்பு. தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய இரண்டு திறமைகளும் பெற்றுள்ள நபர்களுக்கான பணி மதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. டாடா கன்சல்டிங் சர்வீசஸ், விப்ரோ, இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், MBA - IT பட்டதாரிகளை பணிக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
MBA - IT படிப்பு, தொழில்நுட்பத் துறை என்ற எல்லையை தாண்டி உங்களை சிந்திக்க வைத்து, ஒரு நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு பேருதவி புரிய உங்களை தயார்படுத்துகிறது.

இன்னும் என்ன யோசனை? MBA - IT படிப்பில் சேர்வதற்கான வேலையைத் தொடங்குங்கள். இதன்மூலம் நீங்கள் இரண்டு அவதாரம் எடுக்கலாம். டெவலப்பர்கள் மற்றும் ப்ரோகிராமர்கள் குழுவுடன் இணைந்து ஒரு மொழியைப் பேசலாம் மற்றும் மேலாண்மை குழுவினருடன் இணைந்து ஒரு மொழியைப் பேசலாம். எனவே, ஒரு சவாலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை நோக்கி உங்கள் வாழ்க்கை நகர்வதை உறுதி செய்யுங்கள்.

இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
Faculty of management studies (FMS), Delhi
Symbiosis institute of computer studies and research, Pune
Symbiosis centre for information technology, Pune
ISBR Business school, Bangalore
ISBR Business school, Chennai
ABV - Indian institute of information technology and management, Gwalior
Indian institute of information technology and management, Allahabad.

Sunday 25 August 2013

ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்

ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.
அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.

எது முக்கியம்

ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.
மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொடர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற்சிகள், தனக்கு இருக்கும் தனித் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.

உங்களின் ஆலோசனைகள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங்களைத் தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடைக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியும் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தேவையான விபரங்களை தெரிந்துகொண்டு, அங்கே என்னவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.

உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சினை என்னவென்று குறிப்பிடாமல், அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோசனை வடிவில் எழுதியனுப்ப வேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனைகளால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

படிப்பதற்கு எளிதாக...

உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தில், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கியமான அம்சம்.

ரெஸ்யூம் எத்தனை பக்கம்

ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப்பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின்றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும்பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ்யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களுக்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.

தகவல் பரிமாற்றம்

உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்புகொள்ளும் விபரங்களைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற்றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.

இவற்றை தவிருங்கள்

நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப்பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,
I was incharge of the entire purchase function in the ---------- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ------- company என்று எழுதலாம்.

முன்அனுபவ விபரம்

உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப்பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உதாரணமாக, எந்த நிறுவனம், உங்களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன்னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.

தொழில்நுட்ப சவால்

பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை, கணினிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில்(hard copy) அனுப்பினால், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவும். அவை,

* பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன் நகலை(xerox) அனுப்பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேசமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.
* உங்கள் படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.
* ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.
* அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையில் வழங்கினால், குறிப்பிட்ட key word -களை ரெஸ்யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்குநர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசேஷன் துறையுடன் தொடர்புடையவை.
* கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட key words -களை தேடும். எனவே, அவை இல்லையெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிடும்.

சில நொடிகள்தான்...

பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண்டும்.

ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவமைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தனித்தன்மை

வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templates மற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங்களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.

அனுபவத்தை தெரிவித்தல் முறை

உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,
I was responsible for ----------
My duties included ---------------
I was incharge of ---------
போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக, My
contributions were -----------
My accomplishments were ---------
My interventions were -----------
போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.

நேர்மறை அம்சங்கள்

உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம்பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணியாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டுணர்ந்த குறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அந்தக் குறைகள் உங்களிடம் இல்லையெனில், அதுவே உங்களின் நேர்மறை அம்சங்கள். எனவே, அவற்றை குறிப்பிட தயங்க வேண்டாம். உதாரணமாக,
* Being punctual
* Creative
* Caring for minute details
* Reliable
* Following systems and procedure
* Efficiency minded
* Cost conscious
* Waste control
போன்றவற்றை சொல்லலாம்.

முதல் நிலை ஆய்வு

உங்கள் ரெஸ்யூம் ஒரு நிறுவனத்தை அடைந்ததும், முதலில், மனிதவளத் துறையினரால்தான்(HR) பகுப்பாய்வு செய்யப்படும். அவர்கள், நிர்வாகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, உங்களின் தொழில்துறையைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதை சொல்ல முடியாது. எனவே, முடிந்தளவு, உங்களின் Professional jargon -களை பயன்படுத்த வேண்டாம்.
அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய, உலகளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்தவும். இதன்மூலம், உங்களின் ரெஸ்யூம் reader friendly என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், உங்களின் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் அனுபவங்களை குறிப்பிட தவறவே கூடாது.

இதை செய்யாதீர்கள்

உங்கள் ரெஸ்யூமில், Reference பற்றி குறிப்பிடாதீர்கள். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை பெற்றவுடன், அவர்களை, எதிர்கால தகவல் தொடர்புக்கு வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், தேவைப்பட்டால், ரெபரன்ஸ் விபரம் அனுப்பப்படும் என்பதை ரெஸ்யூமில் இடம் இருந்தால் குறிப்பிடலாம். மேலும், ரெபரன்ஸ் நபர்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.

இன்றைய நிலையில், பணி வழங்குநர்கள், நீங்கள் குறிப்பிட்ட ரெபரன்ஸ் நபர்களை மட்டுமே தொடர்பு கொள்வதில்லை. உங்களின் பழைய நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்களைக்கூட தொடர்பு கொள்கிறார்கள்.

எழுத்துப் பிழை

ரெஸ்யூம் தயாரான பிறகு, அதை எழுத்துப் பிழை சரிபார்க்க, கணினியின் உதவியை நாடுவது பலரின் வழக்கமான உள்ளது. ஆனால், அதை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு. ஏனெனில், பல கணினி அமைப்புகளில், அமெரிக்க ஆங்கில நடைமுறைதான் உள்ளது. நமக்கு அதிகம் தெரிந்தது பிரிட்டன் ஆங்கிலம். நமக்கு வேலை தரும் இந்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அப்படித்தான். அதேநேரத்தில், கணினியும் சில காரணங்களால், சில தவறுகளை சுட்டிக் காட்டாமல் விட்டுவிட வாய்ப்புண்டு.
எனவே, உங்கள் ரெஸ்யூமை hard copy எடுத்து, அதை ஒரு எழுத்து விடாமல், ஒரு வரி விடாமல் நீங்களே கவனமாக படிக்கவும். இதன்மூலம், எந்தவொரு தவறையும் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில், மனித மூளையைவிட, வலிமையான கணினி என்று இந்த உலகில் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இருக்க முடியாது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு பிடிக்காத விஷயங்கள். உங்களின் ஒட்டுமொத்த மதிப்பையே அது குலைத்துவிடும்.

Wednesday 10 July 2013

இரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா?


இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு, ஐ.ஐ.டி., கான்பூர் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரட்டை அல்லது இன்டக்ரேட்டட் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.

ஒன்றில் இரண்டு...
படித்து முடித்து பணிவாய்ப்புக்காக பட்டதாரிகள் அல்லாடுவதை தவிர்க்கும் வகையில், இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வடிவமைக்கப்பட்டு, ஒருவரை பணிக்கு தயார் செய்கின்றன. இடைவெளியின்றி, ஒரே நேரத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்புகளை இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வழங்குகின்றன.

சில நிறுவனங்களுக்கு, பொறியியல் மற்றும் மேலாண்மை திறன்களைப் பெற்ற மனிதவளம் தேவைப்படுவதால், அவை, இரட்டைப் பட்டப் படிப்பு பெற்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சாதாரண பட்டப் படிப்பு தகுதிகளைவிட, பணிக்கு தேவையான உடனடித் தகுதியைப் பெறுவது மிகவும் உயர்ந்தது என்பதை உணர வேண்டும். பி.டெக்., படிப்புடன், எம்.பி.ஏ., பட்டத்தையும் (4+1) என ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்யலாம். எனவே, இந்த இரட்டைப் பட்டப் படிப்பு திட்டத்தை, விரைவுபடுத்தப்பட்ட படிப்புத் திட்டம் என்றும் கூறலாம்.

படிப்பின் காலகட்டம்
படிப்பை பொறுத்து, கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, காலகட்டம், 4 முதல் 7 ஆண்டுகள் வரை விரியும். இன்டர்மீடியேட் முதல் பிஎச்.டி., வரையான படிப்புகள் இம்முறையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், உயர்கல்வி பெறும்போது, மாணவர்களை எளிதாக பணிக்கு தயார்படுத்த முடிகிறது மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டத்துடன் மாணவர்கள் நன்கு பழக்கமாகி, மேம்பட்ட சிந்தனைகளைப் பெறுகிறார்கள் என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உற்சாகமாக படித்தல்
பொறியியல் பிரிவில், இரட்டைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்களுக்கான பாடங்கள், வேறுபட்ட முறையில் விரிவாக கற்பிக்கப்படுவதின் மூலம், புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். பொறியியல் முதுநிலைப் பட்டம்பெற மொத்தம் 6 ஆண்டுகள் செலவழிக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகளிலேயே முதுநிலைப் பட்டம் பெற்றுவிடுவது அவர்களுக்கு  மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

பழைய பட்டப் படிப்பு முறைகளிலிருந்து(6 ஆண்டுகள் படிப்பு) புதிய இரட்டைப் பட்டப் படிப்பு முறைகளுக்கு மாறுவதென்பது, பல கல்வி நிறுவனங்களில் உற்சாகமுள்ளதாகவே இருக்கிறது. ஒரு மாணவரை, தொழில்துறைக்கு தயாரானவராக மாற்றுவதில், இந்த இரட்டைப் பட்டப்படிப்பு முறை தெளிவாக செயல்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்தப் புதிய கல்வி முறையின் மூலமாக, நுணுக்க சிந்தனை மற்றும் கற்றல் உற்சாகம் அதிகரிக்கிறது. பொதுவாக, இரட்டைப் பட்டப் படிப்பின் பாடத்திட்டமானது, நிறைந்த உள்ளடக்கமும், பயன்பாட்டு அடிப்படையும் கொண்டது.

பாடத்தை தெரிவு செய்தல்
ஒரு கல்வி நிறுவனத்தில், இரட்டைப் பட்டப் படிப்பை தேர்வு செய்கையில், அந்த கல்வ நிறுவனத்தின் அங்கீகாரம், புகழ் மற்றும் தரம் ஆகியவற்றை கட்டாயம் மனதில் கொண்டே முடிவுசெய்ய வேண்டும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், மூன்றாம் வருட பி.டெக்., படிப்பை முடித்தவுடன், எம்.டெக்., படிப்பில் சேர முடியும்.

ஆறாவது செமஸ்டர் முடிந்த பின்னர், 6.5 CGPA அளவில் மதிப்பெண் வைத்துள்ள அத்தகைய ஆர்வமிக்க மாணவர்கள், ஆசிரியர் மற்றும் துறைத் தலைவரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். இதன்மூலம், இரட்டை டிகிரி படிப்புக்கு மாறிக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.

இரட்டை டிகிரி படிப்புகளுக்கான சேர்க்கை முறை, கல்வி நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. சில கல்வி நிறுவனங்கள், முதல் நாளிலிருந்தே, இரட்டை டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்கள், இரட்டை டிகிரி படிப்பிற்கான சேர்க்கையில், மாணவர்களின் சூழலைப் பொறுத்து, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்களில், இரட்டை டிகிரி படிப்பு முறையை ஒரு மாணவர் கடினமாக உணர்ந்தால், அவர் எம்.டெக்., படிப்பில் சேராமலேயே விலகிக் கொள்ளலாம்.

பணத்தையும், நேரத்தையும் சேமித்தல்
போட்டி நிறைந்த சந்தையில், ஒரு வருடத்தை சேமிப்பதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர், ஒரு வெளிநாட்டு பல்கலையில் எம்.டெக்., படிப்பை முடித்தால், இரட்டை டிகிரி பட்டதாரிக்கு சமமாகவே கருதப்படுவார் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இரட்டைப் பட்டப் படிப்பானது, தொழில் தொடர்பாக, விரைவான முடிவெடுக்க உதவுகிறது.

பொதுவாக, பி.இ., படிப்பிற்கு 2 லட்சமும், எம்.டெக்., படிப்பிற்கு 1.25 லட்சமும் செலவாகிறது. ஆனால், இரட்டை டிகிரி படிப்பில், குறைந்தபட்சம் 1 லட்சம் வரை மிச்சமாகிறது மற்றும் முதுநிலைப் படிப்பில் சேர்வதற்காக எழுத வேண்டிய நுழைவுத்தேர்விலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அலைச்சலின்றி, இரண்டு பட்டங்களையும், ஒரே கல்வி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.

சந்தை தேவையை நிறைவுசெய்தல்
இன்றைய நிலையில், ஒவ்வொருவரும் ஸ்பெஷலைசேஷனை எதிர்பார்க்கின்றனர். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமாக இருந்தாலும், அனுபவம் அதிகமுள்ளவர்களே, தொழில்துறைகளுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த இடத்தில்தான், இரட்டை டிகிரி படிப்பின் தேவை பன்மடங்கு அதிகரிக்கிறது. தனித்தனியாக இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்தால் என்ன மரியாதையோ, அதேயளவு மரியாதைதான், இரட்டை டிகிரி முறையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை முடிப்பதற்கும் கிடைக்கிறது.

ஒரு பி.டெக்., பட்டதாரி ஆண்டு சம்பளமாக ரூ.6 - 12 லட்சம் பெறுகிறார் என்றால், ஒரு இரட்டை டிகிரி முடித்தவர், ஆண்டுக்கு ரூ.9 - 15 லட்சங்கள் பெறுகிறார். கூகுள் போன்ற பிரபலமான நிறுவனங்கள், பி.டெக்., பட்டதாரிகளை விட, இரட்டை டிகிரி முடித்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதாவது, ஆராய்ச்சி செய்யும் மனப்பாங்கு மற்றும் தனியாக சிக்கலைத் தீர்க்கும் திறன் பெற்ற நபர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

மாறுபாடுகள்
குறிப்பிட்ட அளவிலான மாணவர்களுக்கு, இந்த இரட்டை டிகிரி படிப்பு ஒத்துவருவதில்லை. அவர்கள் இப்படிப்பில் சேர விரும்புவதுமில்லை. ஏனெனில், சிலருக்கு பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கும்போதே, நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. எனவே, அதற்குமேல் அவர்கள் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புவதில்லை. எனவே, கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, நிலைமை வேறுபடுகிறது.

Monday 24 June 2013

நீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா? - இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்

        
              சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.

எனவே, எவ்வளவு வேலைகள் காலியாக உள்ளன என்பது பிரச்சினையல்ல. ஆனால், அந்த வேலைகளுக்கான தகுதிபெற்ற ஆட்கள் இருக்கிறார்களா? என்பதுதான் பிரச்சினை. எனவே, சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, அதற்கேற்ப தனது அனைத்துவிதமான திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் திறன் பெற்றவர்களையே, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும், நாள்தோறும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், அவற்றை கையாளும் வகையில், தனது திறன்களை வளர்த்துக்கொள்ளும் திறன்பெற்றவர்களாகவும் அந்த நபர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.



இன்றைய நிலையில், ஐ.டி., நிறுவனங்களைப் பொறுத்தவரை, சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்து, புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் நபருக்கே முதல் முன்னுரிமை தரப்படுகிறது. அவர்களே, முதல் தரமான ஆட்களாக கருதப்படுகிறார்கள். ஏனெனில், வாடிக்கையாளர்கள், தாங்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமானது, தினந்தோறும் பெருகிவரும் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான புதிய தீர்வுகளின் மூலமான சேவையை வழங்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.

இப்படி எதிர்பார்க்கும் நிறுவன வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. நிறுவனப் பணியாளர்கள் தங்களின் சிறப்புத்திறன்களை, வாடிக்கையாளர் தரும் பணத்தில் மேம்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள், அடிக்கடி புதிதுபுதிதாக எதிர்பார்ப்பதால், அனுபவம் வாய்ந்த பணியாளர்களே, தங்களின் திறன்களை அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சிறந்த மனிதவளமாக திகழ விரும்பும் ஒவ்வொருவரும், விஷயங்களை புதிதாக கற்றுக்கொள்ளும் திறனைப் பெற்றிருப்பதோடு, வலிமையான சிக்கல் தீர்க்கும் திறன், சிறந்த தகவல்தொடர்பு திறன்கள் மற்றும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, ஒரு நிறுவனம் புதிதாக படித்து வெளிவரும் பட்டதாரிகளை பணிக்கு எடுக்கையில், அவர் ஒரு விஷயத்தை எந்தளவு விரைவாக கற்றுக்கொள்வார் என்பதில் கவனம் செலுத்தியே, அவரை பணிக்கு எடுக்கிறது. மேலும், அவரிடம் அதிக விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சில வருட அனுபவத்துடன் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் நபரிடம், அவர் தன் துறைசார்ந்து எந்தளவிற்கு திறனும், அனுபவமும், பகுப்பாய்வு திறனும் பெற்றுள்ளார் என்று பார்க்கப்படுகிறது.

அடுத்த முக்கிய விஷயம்
தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நிறுவனமும், கீழ்கண்ட 3 விஷயங்களில் அதிக முதலீடு செய்கின்றன. Network Security, Cloud & Mobility infrastructure and Big Data போன்றவையே அவை. இந்த மூன்று துறைகளில், ஆட்களை பணியமர்த்துவது அதிகமாக இருக்கிறது. எனவே, ஒரு Developer -ஆக சில வருட அனுபவம் உங்களுக்கு இருந்தால், மேற்கூறிய விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களை உயர்த்துவது எது?
தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் அறிவைத் தவிர, ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்துகையில், ஆழ்ந்த அறிவு, துறை நிபுணத்துவம், படைப்பாக்க சிந்தனை மற்றும் சிறந்த தகவல்தொடர்பு திறன் ஆகிய விஷயங்களுக்கும், ஒரு நிறுவனம் சமமான முக்கியத்துவம் கொடுக்கிறது. சில வருட பணி அனுபவம் உடையவர்கள், தொழில்நுட்ப திறன்களுடன், ஆழமான துறை அறிவையும் கொண்டிருந்தால் அவர் பெறக்கூடிய முக்கியத்துவம் அதிகம்.

ஒருவர் தனது துறையில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தி, அதிலேயே ஸ்பெஷலைஸ் செய்யும் ஒருவர், ஒரு வெற்றிகரமான கன்சல்டன்டாக(consultant) மாற முடியும்.ஏனெனில், கன்சல்டன்ட் பணிக்கு நிறைய தகுதியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். வணிகம் சார்ந்த முடிவெடுக்கும் திறன் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தொழில்நுட்பத்தைப் பற்றி படிப்பதென்பது, வெறுமனே அந்த தொழில்நுட்பத்திற்காக மட்டுமல்ல. அதன்மூலமாக, வேறு பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழில்நுட்ப அறிவுடன் சேர்த்து, வணிக செயல்பாட்டு அறிவையும் கொண்டிருக்க வேண்டும்.
இதுதொடர்பாக நிறுவனங்கள் சொல்வது என்னவென்றால், தொழில்நுட்ப அறிவு என்பது முக்கியமானது. ஆனால், அதேசமயம், அதனுடன் சேர்த்து, நிதி அல்லது பார்மசூடிகல் ஆகிய துறைகளின் அறிவும் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட துறைகளைப் பற்றிய கூடுதல் அறிவு இருக்கையில், ஒரு ஐ.டி., நிபுணர் தனது தொழில்நுட்பத் திறனை மிக சரியான முறையில் பயன்படுத்த முடியும்.

ஆனால், இன்றைய நிலையில், பல இளைஞர்களிடம் ஆழ்ந்த அறிவு என்பது இருப்பதில்லை. இந்த போக்கு, அவர்களின் நீடித்த வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. படித்த நபர்களுக்கு, முறையான பயிற்சிகள் இருப்பதில்லை. ஒருவர், சிறந்த தொழில்முறை மேம்பாட்டை அடைய வேண்டுமெனில், அவர் ஆழமாக சென்று படிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் இளைஞர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அவர்களை பணிக்கு சேர்க்கும் நிறுவனத்தால் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க முடியாது. தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, பயனுள்ள முறையில் தாங்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய இளைய சமூகம், பலவிதமான கவனச் சிதறல்களால் பாதிக்கப்படுகிறது. சிற்றின்பம் சம்பந்தமான விஷயங்களுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு, ஊன்றி கவனித்து, துறை சம்பந்தமான ஆழமான அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டால், அடுத்த பல ஆண்டுகள் அவர்கள் கவலையின்றி கோலோச்ச முடியும். கற்பதற்கு ஆர்வமும், அதற்கான திறனும் இருப்பது அவசியம்.

பல முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளன மற்றும் தொழில் திறனை மேம்படுத்தும் வகையிலான கூடுதல் படிப்புகளை மேற்கொள்ள, தங்களின் பணியாளர்களை ஊக்கப்படுத்துகின்றன. இதுபோன்ற லாபக் கூறுகளை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வது ஒருவரின் புத்திசாலித்தனமான செயலாகும்.

கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஒருவர், தனது சக பணியாளர்களைவிட, அதிக முக்கியத்துவம் பெறுவார். உங்களின் பணியை செய்துகொண்டே, புதிய ப்ரோகிராமிங் மொழிகளைக் கற்றுக்கொள்வது அல்லது புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது, உங்களின் பேரம் பேசும் திறனை அதிகப்படுத்தும். இதன்பொருட்டு, பல ஆன்லைன் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஐ.டி., துறையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில், பல பயிற்சி நிறுவனங்கள், பல படிப்புகளை வழங்குகின்றன. உதாரணம், NIIT நிறுவனம், Cisco, Microsoft and Oracle போன்ற பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

மொழித்திறன்
மேற்கூறிய அனைத்து அம்சங்களுடன், இன்னொரு முக்கிய அம்சத்தை கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ஐ.டி., துறையில் பணிபுரியும் ஒரு நிபுணர், வெளிமாநிலத்தை சேர்ந்தவருடனோ அல்லது வெளிநாட்டை சேர்ந்தவருடனோ பேச வேண்டியிருக்கும். அப்போது, அவரின் மொழி மற்றும தகவல் தொடர்பு திறன் இன்றியமையாத ஒன்று. எனவே, ஒருவரை பணிக்கு எடுக்கையில், அவரின் தொழில்நுட்பத் திறன், ஆழ்ந்த அறிவு, கூடுதல் தகுதிகள் ஆகிய பலவற்றுடன், மொழித்திறனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல மொழித்திறன் பெற்ற ஒருவரை, எளிதில் இழக்க எந்த நிறுவனமும் விரும்புவதில்லை.

மேற்கூறிய அலசல்களின் மூலம், ஐ.டி., துறை ஊழியர்கள் பல்வேறான தகுதிகளையும், திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் சிறந்த பணி வாய்ப்புகளையும், நல்ல சம்பளத்தையும் பெற்று, தங்களின் துறையில் கோலோச்ச முடியும் என்பது புலனாகிறது.

Wednesday 10 April 2013

இன்சூரன்ஸ் எடுத்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 வேலைகள்

         ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது மனித வாழ்விற்கான ஒரு பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் எதிர்பாராத விபத்தில் தீடீரென்று காலமாகிவிட்டால் அவருடைய குடும்பம் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகமல் இருக்க இந்த காப்பீட்டுத் திட்டம் உதவி செய்கிறது. அவர் சேர்ந்திருந்த காப்பீட்டுத் திட்டம் அவர் சேமித்திருக்கும் தொகை மற்றும் அவற்றிற்கான கவரேஜ் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு, ஆயுள் காப்பீட்டு நிறுவனமே பொருளாதார உதவிகளை செய்யும்.

         காப்பீட்டுத் தொகை முதிர்ச்சி அடைந்தாலோ அல்லது உயிருடன் இருக்கும் போதே காப்பீட்டுத் தொகையை பெற விரும்பினாலோ, அந்தத் தொகையைத் திட்டமிட்டு பெற முடியும். ஆனால் காப்பீட்டுத் தொகையச் செலுத்தி வந்தவர் இறந்துவிட்டால் அவர் செலுத்தியக் காப்பீட்டுத் தொகையைப் பெற திட்டமிட முடியாது. ஆகவே அப்படிப்பட்ட சோகமான சூழலில் இறந்தவருடைய காப்பீட்டுத் தொகையைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவர் இறந்த பின் அவருடைய ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்தவரின் மரணத்தை அறிவித்தல்

ஒருவர் இறப்பு என்பது ஒரு துக்கமான நிகழ்வாகும். அவருடைய இறப்பு அவருடைய குடும்பத்திற்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் அந்த அதிரிச்சியிலிருந்து விரைவில் மீண்டு வந்து, அவருடைய இறப்பை மிக விரைவாக, அவர் செலுத்தி வந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். கால தாமதம் செய்தால் அவருடைய பணத்தைப் பெறுவதில் கால தாமதம் ஏற்படும்.

ஆனால் பெரும்பாலோர், இறந்தவரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாலும், அவருடைய இறப்பை விரைவில் ஆயுள் காப்பீட்டுத் திட்ட முகவரிடம் தெரிவிக்காமல் இருப்பதாலும் இந்த கால தாமதம் ஏற்படுகிறது. கால தாமதம் ஏற்பட ஏற்பட, இறந்தவரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவரின் இறப்பை மிக விரைவில் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிப்பது நல்லது.

2. ஆயுள் காப்பீட்டு முகவரை தொடர்பு கொள்ளுதல்

இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு உதவி செய்யக்கூடிய ஆயுள் காப்பீட்டு முகவரை மிக விரைவில் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து இறந்தவரின் காப்பீட்டுத் தொகையப் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும். காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் பாலிசிதாரருக்கு முழு உதவி செய்ய வேண்டியது காப்பீட்டு முகவரின் தலையாய கடமையாகும். எனவே அவரை மிக விரைவில் தொடர்பு கொண்டு காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும். ஒரு வேளை முகவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், காப்பீ்ட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

3. நாமினி சான்றிதழ்கள்

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர் இறந்துவிட்டால் அவர் யாரை நாமினியாக நியமித்திருக்கிறாரோ அவர் தான் இறந்தவரின் காப்பீட்டுத் தொகையை சட்ட ரீதியாகப் பெற தகுதியானவர். எனவே நாமினி யார் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இறந்தவருக்குப் பின் நாமினி தான் காப்பீட்டுத் தொகைக்கு உரிமையாளர் ஆகிறார். எனவே காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாமினி தேவையான படிவங்களை நிரப்பி, தொகையைப் பெற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. நாமினி வழங்க வேண்டிய சான்றிதழ்கள்

இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் விரைவாகப் பெற வேண்டும் என்றால் டாக்குமன்டேஷன் மிகச் சரியாக இருக்க வேண்டும். எனவே நாமினி தேவையான படிவங்களை மிகச் சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். எந்தெந்த சான்றிதழ்களை நாமினி வழங்க வேண்டும்,
அ. இறந்தவரின் அசல் இறப்பு சான்றிதழ், நகல் கிடையாது.
ஆ. பாலிசி ஆவணம் அல்லது கடைசியாக பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழ்
இ. நாமினியின் அடையாளம் மற்றும் வயதை உறுதிப்படுத்தும் சான்றுகள்.

5. வங்கி கணக்கு

இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் பெற வேண்டும் என்றால் நாமினி வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அவர் வங்கிக் கணக்கில் இருக்கும் பெயர் மற்றும் முகவரி, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் மற்றும் முகவரியை ஒத்திருக்க வேண்டும். அப்போது தான் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் கால தாமதம் ஆகாது.
மேற்கூறிய அனைத்தும் சரியாக செய்யப்பட்டால் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் கால தாமதம் ஆகாது. மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் பிரச்சனைகளும் ஏற்படாது.

Friday 22 February 2013

பத்து ரூபாயில் சிறுநீரக கல்லுக்கு சிறந்த தீர்வு..!


இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள்.இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .
அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்

நன்றி : http://vayalaan.blogspot.in